Saturday, December 7, 2013

ஜெயமோகனின் 'காடு' - நாவல் பற்றி...

 காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளாயே

-மிளைப் பெருங்கந்தன்
குறுந்தொகை 204
திணை : குறிஞ்சி
 

'காடு' நாவல் படித்து முடித்தேன். ‘முடித்தேன்’ என்பது கூட தவறான சொல் பிரயோகம். ‘காடு’ வாசிப்பை என்னளவில் இன்னும் முடியாத ஒரு தொடர்ச்சியாகவே கருதுகிறேன். சில படைப்புகள் என்னை இவ்வகை இடைநிலைத் தன்மையில் நிறுத்திவிடுகிறது. அதில் ‘காடு’ம் ஒன்று.
 
வாசிப்பின் போது மனஓர்மை தவறுவதோ, படைப்பில் நிகழும் சாத்தியங்களுக்கு எதிராக ஒவ்வாமை நிகழ்வதோ அல்லது வாழ்க்கை பற்றிய இதுவரையான முன்முடிவுகளோ படைப்பின் அனுபவத்தை முழுமையாக எனக்குள் இறங்க விடாமல் செய்து விடுகின்றன. எனக்கு எது நேர்ந்ததோ தெரியவில்லை. ‘காடு’ வாசிப்பு எனக்கு ஒரு வகையான மாயஉணர்வைத் தந்துவிட்டுச் சற்றுத் தள்ளியே நின்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.
 
ஆணியில் அறையப்பட்ட நீலியைப் போன்றே இந்த நாவலின் வாசிப்பனுபவமும் என் மனதுக்குள் பெருவியப்பாய் அறையப்பட்டுவிட்டது. நானும் அந்தக் கிரிதரனைப் போலவே ஒரு விடுதலைத் திறப்பை நிகழ்த்த ஏங்கித் தவிக்கிறேன் என்றே படுகிறது.
 
கிரிதரன் மனதில் நீலி அமானுஷ்ய வனதேவதையாகவும் துால வடிவக் காட்டுப்பெண்ணாகவும் முயங்கிச் செயல்படும் நிலையை எழுத்தில் வடித்துள்ள லாவகம் இதுவரை என் வாசிப்பனுபவத்தில் நான் காணாதது. இரண்டு துண்டுகளான காட்சிப் படிமங்களை ஒன்றாக இணைக்கும் மாயவிளையாட்டை வாசகன் உணராத வண்ணம் எழுத்தில் நிகழ்த்துவதென்பது ஒரு படைப்பிலக்கிய அற்புதம்.
 
‘காடு’ நெடுகிலும் மனிதர்கள் வந்துலவுகிறார்கள். காமம் அவர்களுடைய உடல் தேவையாக, ஏக்கமாக, ஏகாந்தமாக, ரசனையாக, மனநோயாக மற்றும் காதலாக ஒரு பின்தொடரும் நிழலாய் வந்துகொண்டேயிருக்கிறது. காமம் தொடருவதாக மட்டுமல்லாமல் முடிவின்றி தொடரப்படுவதாகவும் இருக்கிறது.
 
மனிதக்காமத்திற்கு ஈடுகொடுத்தோ மறுதலித்தோ நிற்கும் குறியீடுகளாக நாவல் நெடுகிலும் நானாவிதக் காட்டுவிலங்குகளும் பயணிக்கின்றன. காமத்தின் துாதுவர்களாக மலைச்சிகரங்களும் நீரோடைகளும் மரங்களும் செடிகளும் பூக்களும் மட்டுமல்லாது சமயத்தில் மூண்டு நிற்கும் கருமேகங்களும் ஆர்ப்பரித்துக்கொட்டும் மழையும் கூடச் செயல்புரிகின்றன. சங்கப்பாடல்களும் பேரிலக்கியங்களும் மறைநுால்களும் காமத்தின் ஆன்மீக வேர்களைத்தேடிச் சென்று நீர் சொரிகின்றன.
 
அறைக்கு வெளியே அலைபாய்ந்தபடி படபடக்க உலவிக் கொண்டிருக்கும் நீலியின் நிலையிலேயே நானும் இருக்கிறேன் காட்டைச் சென்றடைய.
காட்டை முழுமையாக உள்வாங்கிவிட்டதாய் எவர் கருதினாலும் அது அகங்காரம் அழியாததற்கான அடையாளமே. ‘காடு’ என்னுடைய அகங்காரத்தை அடையாளம் காட்டியிருக்கிறது. மீண்டும் மறுவாசிப்பிற்கான ஒரு அழைப்பாக அதை எடுத்துக்கொள்கிறேன்.
------
 

இந்தக் பதிவு இடம் பெற்ற ஜெயமோகனின் வலைப்பூ சுட்டி : http://www.jeyamohan.in/?p=38982


புத்தகம் : காடு
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியீடு : தமிழினி பதிப்பகம்.



நட்பால் மீண்ட நட்பு...


 
இன்று ஈரோட்டு நண்பர் முகமது இப்ராஹீம் ஜெய்லானியை முதன்முதலாகச் சந்தித்தேன். சந்திப்பு என்னமோ சாதாரணமானதுதான். ஆனால் சில சாதாரணச் சந்திப்புகள் முக்கியமான சந்திப்பாக மாறிவிடுகின்றன. எதிர்பாராத சந்தோஷங்களுக்குக் காரணமாகிவிடுகின்றன. இப்ராஹீமை அவர் அலுவலகத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. முகவரி கேட்டுப் போய் நின்றேன். இன்முகத்துடன் வரவேற்றார்.. என்ன பேசுவது என்று இருவருக்குமே தெரியாமல் சிறிது தடுமாற்றம். குடும்பம், குழந்தைகள், ஜீவனமார்க்கம் என்பது பேன்ற வழமையான விசாரணைகளும் எளிமையான பேச்சுகளுமாகச் சந்திப்பு தொடந்தது. ஒரு விஷயத்தை உணர்ந்தேன். கனிவு என்பது இப்ராஹீம் பாய்க்கு உடல் பொருள் ஆவி யாவற்றிலும் நிறைந்திருந்தது. இனம் புரியாத ஒரு நிறைவு அவரிடம் அமர்ந்திருந்த போது ஏற்பட்டது. ஏதோ ஒரு சந்தர்பத்தில் நான் என் கல்லுாரித் தோழன் அபுதாகீர் பற்றிக் கேட்க, அவரை நீங்கள் இப்போதே பார்க்கலாம் என்றார்.
இருபது வருடமாக பார்க்காமல் விடுபட்ட நட்பு ‘அபுதாகீர்’. கல்லுாரிக்காலம் எல்லோருக்கும் கானாக்காலம். அதில் அபுதாகீர் மறக்க முடியா தோழன். மிக மிக மெலிந்த உடல். மாநிறம். அடக்கமான கூர்ந்த முகம். தீர்க்கமான வெள்ளைவெளேர் விழிகள். பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவாக வழங்கும் புன்னகை. துாய வெள்ளைத் தொப்பி. தாடைக்குக் கீழ்மட்டும் நீண்டு வளர்ந்த குறுந்தாடி என்று இஸ்லாத்தின் சகல அடையாளங்களும் கொண்டு அன்பே வடிவமாய் ஒரு வெள்ளைப்பூ தென்றல் காற்றில் நகர்ந்து வருவது போல் அபுதாகீர் மெல்ல நடந்து வரும் காட்சி உடனே மனதில் விரிந்தது.
 
இப்ராஹீம் பாய் அலைபேசியில் அபுதாகீரை அழைத்து,”உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்“ என்று கூற, சற்று நேரத்தில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அபுவை நான் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏதும் இல்லை. அதே கண்கள், அதே புன்னகை, ஒரு கிராம் கூட அதிகமாகாத அதே மெல்லிய உடல், தாடி மட்டும் சற்றே நிறம் மாறியிருந்தது.
என்னை அபுவுக்குத் தெரியவில்லை. சில விளையாட்டுகளுக்குப் பின் என்னைக் கண்டுபிடித்த அபு மகிழ்ச்சியைக் கண்களிலேயே காட்டிய படி மெல்லப் புன்னகைத்து என் கைகளைப் பற்றி, ”எப்படியிருக்கீங்க“ என்ற போது நிறைய நினைவுகள் எனக்குள் மீண்டது. இருபது வருடங்கள் கழித்து ஒரு நல்ல நண்பனை எனக்குக் காட்டக் காரணமான முகமது இப்ராஹீம் ஜெய்லானிக்கு அல்லாஹ் அருள்புரிவாராக.
 
 

தினேஷ் பழனிசாமி - வளர வாழ்த்துகள்


தினேஷ் பழனிசாமி, நம் பலராலும் அறிந்திந்திருக்கும்  நண்பன். எனக்கு ஈரோட்டில் ஒரு கூட்டத்தில் வைத்து அறிமுகம் ஆனவர். அவர் முகம் சற்று பரிச்சயம் ஆகும் முன் மீண்டும் இரண்டாவது முறை அவரைச் சந்திந்த நிகழ்வு சற்று சுவாரஸ்யமான நினைவு.
 
ஒரு நாள் காங்கயம் சாலையில் நான் என் மோட்டார் பைக்கில் வழக்கமாகத் தலையில் ஹெல்மெட்டுடன் சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் தினேஷ் தன் தாயை அவருடைய மோட்டார் பைக்கில் பின்புறம் அமர வைத்துச் சென்று கொண்டிருந்தார். அவசர வேலை காரணமாகவும் அது தினேஷ் தானா என்ற சந்தேகத்துடனும் நான் அவர் வண்டியை முந்திக் கொண்டு செல்ல எத்தனித்தேன். என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்த அவருடைய தாய் தினேஷிடம் ஏதோ சொல்ல, தினேஷ் தன் வண்டியின் வேகத்தைக் கூட்டி முன்னோக்கிச் சென்று கொண்டேயிருந்தார். நானும் தினேஷின் உருவத்தை உறுதிபடுத்திக் கொள்ள என் வண்டியின் வேகத்தைக் கூட்டி அவரைப் பின் தொடர்ந்தேன். அதற்குள் நான் திரும்ப வேண்டிய திருப்பம் வந்தபடியால் நான் பிரிந்து வேறு திசையில் சென்று விட்டேன். இந்தச் சம்பவத்தைப் பற்றி வேறு ஒருநாள் தினேஷிடம் போனில் பேசிய போது,
 
“ ஓ…அது நீங்க தானா அண்ணா…எனக்குத் தெரியவில்லை” என்றார்.
 
“சரி ஏன் அவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டினீர்கள்.?” என்று கேட்டேன்.
 
“அம்மா சொன்னாங்க. எவனோ பின்னாடி கூடவே வர்றான். வழிப்பறித் திருடன் போல இருக்கு.
 கொஞ்சம் வேகமா போன்னு. அதான் கொஞ்சம் வேகமா போனேன். நீங்க ஹெல்மெட் போட்டிருந்ததால அது நீங்க தான்னு தெரியாம போச்சு” ன்னு சிரித்துக் கொண்டே சொன்னார்.
 
எப்படியிருக்கு பாருங்க. சரி அதை விடுங்கள். கொஞ்ச காலமாகவே தினேஷை கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும் அவரின் பதிவுகள் மிக அற்புதமான வெளிப்பாடுகளாக வருவதை.
 
அவற்றில் சில...
 
“தொலைத்ததையே தேடிக்கொண்டிருந்தால் கொலம்பஸ் போல் எப்படி ஆவது?”
 
“கடந்து வந்துவிட்டதால் அனைத்தையும் வென்று வந்ததாக அர்த்தம் இல்லை.”.
 
“தேடல் தொடங்கினாலும் தொலைவது குறைவதில்லை...“
 
“ஏற்றி விட ஏணிகள் தேவையில்லை, எண்ணங்கள் சரியாக இருந்தால் போதும்“
 
“ஐயமின்றி விளையாடும் அணில்களின் அழகை ரசிக்கவாவது மரங்கள் சூழ்ந்த கோயிலுக்கு மாதம் ஒரு முறையேனும் செல்ல வேண்டும்...“
 
“உளவியலோடு தொடர்புகொண்டது போல்தான் தெரிகிறது இந்த லைக்கியலும்..”.
 
பகடியும் அழகியலும் கூர்ந்த ஞானமும் கொண்டு தன் பதிவுகள் மூலம் தன்னை வெளிப்படுத்திவரும் தினேஷ் மேலும் மேலும் முகநுாலில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் உயர வேண்டும் என்று உங்களில் ஒருவனாய் வாழ்த்துகிறேன்.
 
 

சமரசமில்லா கலைஞனின் இறுதி வார்த்தை



அனேகமாக எனக்குத் தெரிந்து தமிழில் எக்ஸிஸ்டென்ஷியலிச நாவல் வடிவங்களைத் துலங்கவைத்த எழுத்தாளர் ஜி.நாகராஜன். அவர் கடும் நோய்வாய்ப்பட்டு மதுரை பொதுமருத்துவமனையில் மிக சிரமமான முறையில் தன் இறுதிநாட்களைக் கழித்தவர். இறப்பதற்கு முந்தைய இரவு கடும்குளிர் அவரை வாட்டியிருக்கிறது. அவர் தன் இலக்கிய மாணவன் ஒருவரிடம்,
 
“ரொம்ப குளிருது.....சிதையில் போய் படுத்துக்கொண்டால்தான் இனி என் குளிர் அடங்கும்” என்று கூறியிருக்கிறார்.
 
மறுநாள் காலையில் அவர் உயிர் பிரிந்தது. தன் முழு வாழ்க்கையையும் இலக்கியத்தையே சாட்சியாக வைத்து நகர்த்திய ஒரு கலைஞன் தன் இறுதிவார்தையைக் கூட ஓர் உன்னதமான இலக்கியப் பிரதியாக்கிவிட்டு மறைந்திருக்கிறார்.

அவரின் இரண்டு நாவல்கள்:
---------------------------------
-குறத்தி முடுக்கு
-நாளை மற்றுமொரு நாளே



 

யாழியின் கவிதை பற்றி....

நம் கவிதை நண்பன் யாழி அவருடைய கவிதைத் தொகுதி ஒன்றை எனக்கு (என் கைரேகை படிந்த கல்) அன்பளிப்பாகக் கொடுத்தார் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். அதைச் சமீபத்தில் படித்தேன். படிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தர வல்ல நவீனக் கவிதைவகை அல்ல அவருடை கவிதைகள். நேரடியான பொருள் கொடுக்கக் கூடிய எளிய வகைக் கவிதைகள்தான். ஆனால் அற்புதமான கவிதைகள். நம்முடைய அன்றாட எண்ணங்களையே கவிதைச் சுவை கூட்டி நமக்குத் திருப்பிக் காட்டுபவை. மிக நுண்ணிய விஷயங்களைக் கூட தம் மொழியின் ஒளி கொண்டு வெளிச்சமிட்டுக் காட்டுபவை. அவருடைய பானையின் ஒரு சோறு இதோ உங்களுக்காக :
 

சந்தர்ப்பவாதம்
----------------------
சாக்கடையின் துார்களுக்காக
 வீட்டின் உட்பூச்சுக்காக
 புடைத்தெடுக்கப்படும் அரிசிக்காக
 மழிக்கப்படும் முகங்களுக்காக
 சில நேரங்களில்
 தள்ளி வைக்கப்படுகிறது
தீண்டாமையும்



-யாழி
 

ஒரு முதல் சந்திப்பு......




யாழி, நல்ல கவிதைக்காரர். இன்று கோவை சென்றிருந்தபோது ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திக்க எண்ணி போன் செய்தேன். ஒரு இலக்கியக் கூட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும் என்றும் சொல்லி வரச்சொன்னார். போனேன்.
அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பாக நடந்து கொண்டிருந்த ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம். வாசலில் யாழி கரம் குலுக்கி உள்ளே அழைத்துச் சென்றார். அரங்கத்தில் சுமார் ஐம்பது தலைகள் இருந்தன. அதில் ஐம்பது சதவிகிதம் ஐம்பதைத்தாண்டியவர்கள். நடுத்தரம் கொஞ்சம். இளைஞர்கள் கொஞ்சம். நான்கு இளம் பெண்கள். நடுவயதை நெருங்கிய ஒரு திருநங்கை.
 
நாற்பது மதிக்கத்தக்க ஒடிசலான தேகன் ஒருவர் சில காகிதங்களைக் கையில் வைத்துக்கொண்டு கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். பள்ளி ஆண்டுவிழாக் கூட்டத்தில் எட்டாம் வகுப்புப் பிள்ளைகள் வாசிக்கும் கவிதைக்குச் சமமானதொரு ஆக்கம்தான். ஆனாலும் வாசிப்பவரிடம் ஒரு உத்வேகம் இருந்தது. அங்கு தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாகப்படவில்லை.
 
நான் யாழியைத் திரும்பிப் பார்த்தேன். அவர் கற்பூரம். புரிந்துகொண்டார். போகலாம் என்றார். நாங்கள் எழுந்து வெளியெற எத்தனித்தவுடன் எங்களுக்கு முன் அமர்ந்திருந்த திருநங்கை எழுந்து வெளியேறினார். அவரைச் சிலர் பின் தொடர்ந்தனர். நாங்களும் வெளியே வந்தோம். வாசலில் அந்தத் திருநங்கையை மையப்படுத்தி ஒரு சிறுகூட்டம் கூடியது. கூடவந்த சிலர் உடனடிச் சிரிப்புகளைப் பொருத்திக்கொண்டு அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அவர் யார் என்று யாழியிடம் கேட்டேன். “அவர் ஒரு செக்ஸ்ஒர்க்கராக இருந்திருக்கிறார். ஒரு திருநங்கையாக தான் பட்ட வேதனைகளைப் பதிவு செய்ய எண்ணி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவர்தான் இன்றைய கூட்டத்தின் சிறப்பு விருந்தினர். அவர் பேசி முடிக்க நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். பிறகுதான் கவிதை வாசிப்பு ஆரம்பித்தது என்றார்.
 
பேசிக்கொண்டே அரங்கத்தை விட்டு கொஞ்சதுாரம் வந்துவிட்டோம். யாழியின் சில முகநுால் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் அறிமுகம் முடித்து இருவரும் கிளம்பினோம். கொஞ்சம் புறநகர் வந்து ஒரு தேனீர்க் கடையில் நுழைந்து அமர்ந்தோம். யாழி தன் இரண்டு கவிதைத் தொகுப்புகளை எனக்கு அன்பளித்தார். பரஸ்பர தகவல் பரிமாற்றம், எங்களுக்குத் தெரிந்த அளவிலான கவிதைகுறித்த நுட்பங்கள், பொதுவான இலக்கிச்சூழல், முட்டைபப்ஸ் மற்றும் தேனீருடன் எங்கள் முதல்சந்திப்பு இனிதே முடிந்தது. விடைபெற்றுக்கொண்டு திரும்பும் போது இருவருமே சந்தோஷமாக இருந்ததாக உணர்ந்தோம்.
 
 

கார்த்தி என்றொரு நண்பன்....

 

என்னால் ‘சகலை என்று அன்புடன் அழைக்கப்படும் நண்பன் கார்த்தியை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். அவரைப்பற்றி நான் சொல்ல வேண்டியவை சில உண்டு.
தன் எண்ணம், சொல், செயல் இவற்றில் எப்பொழுதுமே ஒரு எளிமையைக் கடைபிடித்துவரும் கார்த்தி, தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத இயல்பும் அடக்கமும் கொண்டவர். அவரிடம் நான் கண்டு வியந்த ஒரு முக்கியமான விஷயம் அவருடைய துறவு மனம். எதிர்காலம் பற்றிய எந்த ஒரு அச்சமோ எதிர்மறை எண்ணமோ இன்றி வாழ்க்கையை அதன் போக்கில் மிக இயல்பாக எதிர்கொள்ளும் பாங்கும், தனக்கான எந்தவொரு தனித்துவத்தையும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பாமல் ஒரு பார்வையாளனாய்த் தன் சக நண்பர்களின் நடவடிக்கைகளை அணுகும் பக்குவமும் அவருக்கு வாய்க்கப்பட்டிருக்கும் ஒரு வரம்.
கார்த்தியுடனான உரையாடல்களின் போது நாம் எங்காவது தவறு செய்துவிட்டால் அல்லது அவருக்கு நம் கருத்து பிடிக்காவிட்டால் உடனடியாக தாட்சண்யம் ஏதுமின்றி முகத்துக்கு நேராக தன் மறுப்பைச் சொல்லிவிடுபவர். பிடிக்காத விஷயத்திலிருந்து எப்படித் தன்னை விடுவித்துக்கொள்வதென்று தெரியாமலேயே நம்மில் பலர் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த விஷயத்தில் கார்த்தி ஒரு தேர்ந்த வல்லுநர் என்றே சொல்லலாம். மிக நாசூக்காகத் தன்னை சிக்கல்களின் பிடியிலிருந்து விடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்.
கார்த்திக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது அவருடைய அபாரமான சினிமா ஞானம். உள்ளூர் சினிமா தவிர வேறு எதுவுமே அறியாத என்னை முதன் முதலில் உலக சினிமாவின் மாபெரும் கோட்டைக்குள் கைபிடித்து அழைத்துச்சென்று நடக்கவிட்டவர் கார்த்தி. சினிமாவை நாடு, மொழி, இயக்குநர் என்ற வகைப்பாடுகளின் கீழ் கொண்டுவந்து என் ரசிப்புத்தன்மையைக் கூர்மைப்படுத்தியவர் உலகசினிமாவில் கார்த்திக்கு உள்ள பரிச்சயம் அபாரமானது. ரகளையான ரசனை கொண்டது. அனேகமாக நாம் ஒரு படத்தின் பெயரைச் சொன்னாலே அது எந்த நாட்டின் சினிமா, அதன் இயக்குநர் யார் அதில் நடித்த நடிகர் நடிகையர் பெயர், அது வெளிவந்த ஆண்டு போன்ற விபரங்களைத் துல்லியத்துக்கு மிக நெருக்கமாகச் சொல்லிவிடக்கூடியவர். இவையெல்லாம் இணையத்திலேயே கிடைக்கக்கூடிய செய்திகள்தான். ஆனால் படங்களைப்பற்றிய தகவலோடு நிற்காமல் அந்தப் படத்தைப்பற்றிய தன் கூர்மையான விமர்சனத்தை மூன்று நான்கு வார்த்தைகளுக்குள் மிக அலாதியானதொரு உடல்மொழியின் துணைகொண்டு அற்புதமாகப் பகிரக்கூடியவர். அந்தப்படத்தின் மேலான ஆழந்த ரசனையின் பொருட்டு உருவாகிவந்த மனஉடல் ஒத்திசைவாகத்தான் அதை நான் காண்டு வருகிறேன். அனேகமாக அவர் அறிமுகம் செய்யும் படங்களைப் பிறகு நான் பார்க்க நேரிடும் போது அவருடைய நான்கு வரி விமர்சனம், அந்தப்படத்தின் மூலமாக நான் அடைந்த அனுபவத்துக்கு மிக நெருக்கமாகப் பொருந்துவதை உணர்ந்திருக்கிறேன்.
இனி வரும் எல்லா காலத்திலும் சினிமாவின் ரசனைக்குள்ளும் அதன் அறிவார்ந்த நுட்பத்துக்குள்ளும் நான் செயல்படும் பட்சத்தில் அது அத்தனையும் கார்த்திக்கே சமர்ப்பணம். ஆனால் கார்த்தி எப்போதும் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்வது, ”நான் ஒரு நுனிப்புல் மேய்பவன் என்றுதான்.
 
 

Sunday, September 22, 2013

6 மெழுகுவர்த்திகள் - சினிமா பற்றி...

இருண்மையின் மீது பாயும் வெளிச்சம்






நேற்றுப் படம் பார்த்தேன். உண்மையிலேயே மிரண்டுவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஒரு கணம் கூட நம் கவனத்தைத் திசை திருப்ப விடாத கச்சிதமான திரைக்கதை.

ஏழாம் உலகம் நாவலில் குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்கள் உறுப்புகள் சிதைக்கப்பட்டு பிறகு பிச்சை எடுக்கத் தயார் படுத்தப்படுவார்கள். அப்படிக் கடத்தப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட சில குழந்தைகளை அடைத்து வைத்திருப்பதை ஜெயமோகன் அந்த நாவலில் ஒரு இடத்தில் தொட்டுக்காட்டியிருப்பார். அந்தக் காட்சியின் நீட்சியே ‘6 மெழுகுவர்த்திகள்’ படம்.

நான் அந்த நாவலைப் படித்த போது என் குழந்தையைத் திருடர்களுக்குப் பறிகொடுத்தால் என் மனநிலை எப்படியிருக்கும், எவ்விதம் பாதிக்கப்படுவேன், எப்படி அவளைத் தேடி அலைவேன் என்று நினைத்து நினைத்து மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளானேன். அந்த மனநிலையின் செயல்பாட்டுப் பிரதியே இந்தப் படம்.

ஒரு இளம் தம்பதிகள் தங்கள் அன்பு மகனான சிறுவனை ஒரு கூட்ட நெரிசலில் பறிகொடுத்துவிடுகிறார்கள். அந்த மகனை மீட்கப் புறப்படும் பாசமிகு தந்தையின் அலைச்சல் மிகு பயணமாய் விரிகிறது கதை. காவல் துறையின் மெத்தனத்தில் பொறுமையிழந்து தன் மகனைத் தானே தேடிக் கண்டுபிடித்துவிடும் முடிவுடன் காவல் துறையிலிருந்தே நுால் பிடிக்கிறான் அந்தத் தந்தை.

குழந்தைகளைக் கடத்த உதவிசெய்யும் ஒரு குழுவின் மூலமாகக் கிடைக்கும் ஒரு ஒற்றைத் தகவலைத் துணைகொண்டு ஆந்திரா மாநிலம் வழியாக இந்தியாவின் பல பகுதிகளில் அலைந்து திரிகிறான். அந்த கடும் கருப்புப் பயணத்தில் அவன் சந்திக்கும் குரூர மனிதர்களும் அதிர வைக்கும் சூழ்நிலைகளும் மிகப் பதட்டமான அனுபவமாக நமக்கு உணர்த்தப்படுகிறது. இளம் தளிர்கள் கடத்தப்படும் காரணம் நமக்கு ஒருவாறு தெரியவந்தவுடனேயே இயல்பாக நம்முடைய கவனமும் அவன் தந்தையைப் போலவே துளியும் சிதறாமல் ஒர்மை கொள்கிறது.

படத்தின் இன்னோரு அற்புதம் அதில் நடித்தவர்களின் வியக்க வைக்கும் உடல்மொழி. அதன் உச்சமென்று இருவரைச் சொல்லலாம். ஒருவர் தந்தையாக வரும் ஷாம். இன்னொருவர் அவருடனே பயணிக்கும் கார் ஓட்டுநர் மூணார் ரமேஷ்.

சில இடங்களில் கதாபாத்திரத்தின் கனத்தைத்தாங்க முடியாமல் ஷாம் தடுமாறுவது போல் தெரிந்தாலும் அதுகூட இயல்பான வெளிப்பாடாகவும் கருத இடமுண்டு. ஏனெனில் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்ளும் போது மனிதர்கள் இப்படித்தான் எதிர்வினைபுரிவார்கள் என்பது யாரும் கணித்துவிட முடியாததுதானே. அந்த வகையில் ஷாம் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் மூலமாக நெருக்கடியான நிலைகளில், தான் அடையும் அனுபவத்தை மிக சூக்குமமாக நமக்கும் கடத்துகிறார்.
   
இன்னொருவர் மூணார் ரமேஷ். சிறுவனைத் தேடி அலையும் தந்தைக்கு உதவி செய்யும் கார் ஓட்டுநர் பாத்திரம் அவருக்கு. பல படங்களில் ஒரு துணைப் பாத்திரமாக வந்து போன ரமேஷ் தன் அபரமான நடிப்புத் திறனை இதில் நிறுவியிருக்கிறார். மிக மிக அற்புதமான பங்களிப்பு அவருடையது. இறுதியாக ஷாமுக்கு உதவி செய்ய வரும் முஸ்லீம் பெரியவரும் இந்த இடத்தில் கவனம் கொள்ளத்தக்கவரே.

மற்றும் இதில் குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபடும் பல வகை மனிதர்கள் வந்து போகிறார்கள். அனைவருமே தங்கள் தொழிலின் குரூரத்தை மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். இந்தக் கொடூரக் காட்சிகளின் படைப்பூக்கம் இதில் நடித்த நடிகர்களின் திறனாலேயே பூரணத்துவம் பெறுகிறது.

இது தவிர வியக்க வைக்கும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் அலைந்து திரியும் தந்தையுடனேயே நம்மையும் படபடப்பாய்ப் பயணிக்க வைக்கும் கிச்சாவின் ஒளிப்பதிவும் யதார்த்தம் விரவிக்கிடக்கும் இயல்பான ஜெயமோகனின் வசனங்களும் படத்தைத் தரமான வரிசையில் நிறுத்தி வைக்கின்றன.


சமூகத்தில் மிகத் தீவிரமாகப் புரையோடிக் கொண்டிருக்கும் ஒரு கருப்பு அவலத்தை அதன் குரூர அழகியலுடன் பதிவு செய்கிறது இந்தப் படம். கதை சொல்லும் யுக்தி மற்றும் காட்சிகளின் எதிர்பாராத திசைமாறுதல்கள் இவைகளின் மூலம் பார்வையாளனுக்கு ஏற்படுத்த வேண்டிய உணர்வுகளையும் கடத்த வேண்டிய அனுபவங்களையும் லாவகமாக, பிசிறில்லாமல் நிகழ்த்திக் காட்டும் V.Z.துரையின் இயக்கம் இந்தப் படத்தை சந்தேகமில்லாமல் ஒரு கலைப்படைப்பாக நம்முன் வைக்கிறது.




Wednesday, August 14, 2013

வா.மு.கோமு விழா - அங்கீகாரத்தின் தொடர்ச்சி...


புத்தக வெளியீட்டு விழா
 
 
கடந்த ஞாயிறு (11.08.2013) மாலை ஈரோட்டில் எழுத்தாளர் வா.மு.கோமுவினுடைய இரண்டு புத்தகங்களின் (தவளைகள் குதிக்கும் வயிறு ...மற்றும் பிலோமி டீச்சர்) வெளியீட்டு விழா நடந்தது. அதில் நானும் வாழ்த்துரை வழங்க முடிவாகியிருந்தது. கடந்த மாதம் அவருடைய எழுத்துகளை அங்கீகரித்து நான் எழுதிய கட்டுரையை படித்த நண்பர்கள் என்னையும் தேர்ந்தேடுத்தார்கள் என்று நினைக்கிறேன். நன்று.

இலக்கியக் கூட்டத்துக்கே உரிய அளவான கூட்டமும் எளிமையான மேடைச் சம்பிரதாயங்களுமாக விழா துவங்கியது. வா.மு.கோமுவின் எழுத்தை இதுநாள் வரை ‘பாலியல் எழுத்து’ என்று நிராகரித்துக் கொண்டிருந்த சில நண்பர்களும் விழாவுக்கு வந்திருந்தார்கள். புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அது குறித்துப் பேசப்பட்டது. வா.முவைப் பற்றி நான் ஏற்கனவே எழுதி வெளியிட்ட பதிவைக் கட்டுரையாக வாசித்தேன். இறுதியில் அவர் ஏற்புரை நிகழ்த்தினார். எல்லாம் சுபம்.

இந்தக் கூட்டம், வா.மு.கோமு பற்றிய பல முன்முடிவுகளைத் தகர்த்து அவருடைய எழுத்துகளை நிராகரித்த நண்பர்கள் மத்தியில் ஒரு மனமாற்றத்தை உருவாக்கியிருந்ததை உணரமுடிந்தது. அவரை நிராகரித்த நண்பர்கள், தங்கள் கருத்துக்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்களல்ல. நல்லதெனப்படும் பட்சத்தில் தங்கள் நிலைகளை எப்பொழுதுமே மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள். கருத்துக்களை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய வல்லமை பெற்றவர்கள். அவர்கள் வா.மு.கோமுவின் எழுத்துகளைப் படித்து அதை அங்கீகரிக்கும் நிலை ஏற்படுமேயானால் வா.மு.கோமுவின் எழுத்து இன்னும் பல வாசகர்களைச் சென்றடையும்.

எனக்குப் பின்னால் வாழ்த்துரை வழங்க வந்த மோகனரங்கன் இப்படிச் சொன்னார் :

“நல்ல படைப்பாளிகளை முதலில் நாம் அலட்சியப்படுத்துகிறோம். பிறகு மெல்ல கவனிக்கிறோம். பிறகு அவர்களுடன் முரண்படுகிறோம். இறுதியாக அவர்களை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கிறோம்.”
 
*
வாசித்த கட்டுரையின் சுட்டி : http://veerawritings.blogspot.com/2013/07/blog-post_22.html
 
 
 
 
 
 

Tuesday, August 6, 2013

ஒரு முதல்சந்திப்பு

யாழி. என் முகநுால் நண்பர். நல்ல கவிதைக்காரர். இன்று கோவை சென்றிருந்தபோது ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திக்க எண்ணி போன் செய்தேன். ஒரு இலக்கியக் கூட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும் என்றும் சொல்லி வரச்சொன்னார். போனேன்.

அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பாக நடந்து கொண்டிருந்த ஒரு கவிதை வாச...ிப்புக் கூட்டம். வாசலில் யாழி கரம் குலுக்கி உள்ளே அழைத்துச் சென்றார். அரங்கத்தில் சுமார் ஐம்பது தலைகள் இருந்தன. அதில் ஐம்பது சதவிகிதம் ஐம்பதைத்தாண்டியவர்கள். நடுத்தரம் கொஞ்சம். இளைஞர்கள் கொஞ்சம். நான்கு இளம் பெண்கள். நடுவயதை நெருங்கிய ஒரு திருநங்கை.

நாற்பது மதிக்கத்தக்க ஒடிசலான தேகன் ஒருவர் சில காகிதங்களைக் கையில் வைத்துக்கொண்டு கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். பள்ளி ஆண்டுவிழாக் கூட்டத்தில் எட்டாம் வகுப்புப் பிள்ளைகள் வாசிக்கும் கவிதைக்குச் சமமானதொரு ஆக்கம்தான். ஆனாலும் வாசிப்பவரிடம் ஒரு உத்வேகம் இருந்தது. அங்கு தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாய்ப் படவில்லை.

நான் யாழியைத் திரும்பிப் பார்த்தேன். அவர் கற்பூரம். புரிந்துகொண்டார். போகலாம் என்றார். நாங்கள் எழுந்து வெளியெற எத்தனித்தவுடன் எங்களுக்கு முன் அமர்ந்திருந்த திருநங்கை எழுந்து வெளியேறினார். அவரைச் சிலர் பின் தொடர்ந்தனர். நாங்களும் வெளியே வந்தோம். வாசலில் அந்தத் திருநங்கையை மையப்படுத்தி ஒரு சிறுகூட்டம் கூடியது. கூடவந்த சிலர் உடனடிச் சிரிப்புகளைப் பொருத்திக்கொண்டு அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அவர் யார் என்று யாழியிடம் கேட்டேன். “அவர் ஒரு செக்ஸ்ஒர்க்கராக இருந்திருக்கிறார். ஒரு திருநங்கையாக தான் பட்ட வேதனைகளைப் பதிவு செய்ய எண்ணி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவர்தான் இன்றைய கூட்டத்தின் சிறப்பு விருந்தினர். அவர் பேசி முடிக்க நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். பிறகுதான் கவிதை வாசிப்பு ஆரம்பித்தது” என்றார்.

பேசிக்கொண்டே அரங்கத்தை விட்டு கொஞ்சதுாரம் வந்துவிட்டோம். யாழியின் சில முகநுால் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் அறிமுகம் முடித்து இருவரும் கிளம்பினோம். கொஞ்சம் புறநகர் வந்து ஒரு தேனீர்க் கடையில் நுழைந்து அமர்ந்தோம். யாழி தன் இரண்டு கவிதைத் தொகுப்புகளை எனக்கு அன்பளித்தார். பரஸ்பர தகவல் பரிமாற்றம், எங்களுக்குத் தெரிந்த அளவிலான கவிதைகுறித்த நுட்பங்கள், பொதுவான இலக்கிச்சூழல், முட்டைபப்ஸ் மற்றும் தேனீருடன் எங்கள் முதல்சந்திப்பு இனிதே முடிந்தது. விடைபெற்றுக்கொண்டு திரும்பும் போது இருவருமே சந்தோஷமாக இருந்ததாக உணர்ந்தோம்.
 
 
-2013 ம் ஆண்டு நண்பர்கள் தினத்தன்று எழுதப்பட்டது.
 
 
 

Sunday, August 4, 2013

கார்த்தி என்றொரு நண்பன்......

 
என்னால் ‘சகலை’ என்று அன்புடன் அழைக்கப்படும் கார்த்தி எனற நண்பனைப்பற்றிக் கொஞ்சம் எழுதவிரும்புகிறேன். முகநுாலில் என் ஃபிரண்ட் லிஸ்ட்டில் இருக்கும் பல பேருக்கு அவரிடம் முகநுாலின் மூலமாக அறிமுகம் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு நேரடியாகவும் அவரைத் தெரிந்திருக்கலாம்.
என்னைவிட அதிகமாக வலைப்பூவிலும் முகநுாலிலும் தொடர்புகொண்டிருக்கும் அவரைப்பற்றி நான் சொல்ல வேண்டியவை சில உண்டு.

தன் எண்ணம், சொல், செயல் இவற்றில் எப்பொழுதுமே ஒரு எளிமையைக் கடைபிடித்துவரும் கார்த்தி, தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத இயல்பும் அடக்கமும் கொண்டவர். அவரிடம் நான் கண்டு வியந்த ஒரு முக்கியமான விஷயம் அவருடைய துறவு மனம். எதிர்காலம் பற்றிய எந்த ஒரு அச்சமோ எதிர்மறை எண்ணமோ இன்றி வாழ்க்கையை அதன் போக்கில் மிக இயல்பாக எதிர்கொள்ளும் பாங்கும், தனக்கான எந்தவொரு தனித்துவத்தையும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பாமல் ஒரு பார்வையாளனாய்த் தன் சக நண்பர்களின் நடவடிக்கைகளை அணுகும் பக்குவமும் அவருக்கு வாய்க்கப்பட்டிருக்கும் ஒரு வரம்.

கார்த்தியுடனான உரையாடல்களின் போது நாம் எங்காவது தவறு செய்துவிட்டால் அல்லது அவருக்கு நம் கருத்து பிடிக்காவிட்டால் உடனடியாக தாட்சண்யம் ஏதுமின்றி முகத்துக்கு நேராக தன் மறுப்பைச் சொல்லிவிடுபவர். பிடிக்காத விஷயத்திலிருந்து எப்படித் தன்னை விடுவித்துக்கொள்வதென்று தெரியாமலேயே நம்மில் பலர் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதுண்டு. அந்த விஷயத்தில் கார்த்தி ஒரு தேர்ந்த வல்லுநர் என்றே சொல்லலாம். மிக நாசூக்காகத் தன்னை சிக்கல்களின் பிடியிலிருந்து விடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்.

கார்த்திக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது அவருடைய அபாரமான சினிமா ஞானம். உள்ளூர் சினிமா தவிர வேறு எதுவுமே அறியாத என்னை முதன் முதலில் உலக சினிமாவின் மாபெரும் கோட்டைக்குள் கைபிடித்து அழைத்துச்சென்று நடக்கவிட்டவர் கார்த்தி. சினிமாவை நாடு, மொழி, இயக்குநர் என்ற வகைப்பாடுகளின் கீழ் கொண்டுவந்து என் ரசிப்புத்தன்மையைக் கூர்மைப்படுத்தியவர் உலகசினிமாவில் கார்த்திக்கு உள்ள பரிச்சயம் அபாரமானது. ரகளையான ரசனை கொண்டது. அனேகமாக நாம் ஒரு படத்தின் பெயரைச் சொன்னாலே அது எந்த நாட்டின் சினிமா, அதன் இயக்குநர் யார் அதில் நடித்த நடிகர் நடிகையர் பெயர், அது வெளிவந்த ஆண்டு போன்ற விபரங்களைத் துல்லியத்துக்கு மிக நெருக்கமாகச் சொல்லிவிடக்கூடியவர். இவையெல்லாம் இணையத்திலேயே கிடைக்கக்கூடிய செய்திகள்தான். ஆனால் படங்களைப்பற்றிய தகவலோடு நிற்காமல் அந்தப் படத்தைப்பற்றிய தன் கூர்மையான விமர்சனத்தை மூன்று நான்கு வார்த்தைகளுக்குள் மிக அலாதியானதொரு உடல்மொழியின் துணைகொண்டு அற்புதமாகப் பகிரக்கூடியவர். அந்தப்படத்தின் மேலான ஆழந்த ரசனையின் பொருட்டு உருவாகிவந்த மனஉடல் ஒத்திசைவாகத்தான் அதை நான் காண்டு வருகிறேன். அனேகமாக அவர் அறிமுகம் செய்யும் படங்களைப் பிறகு நான் பார்க்க நேரிடும் போது அவருடைய நான்கு வரி விமர்சனம், அந்தப்படத்தின் மூலமாக நான் அடைந்த அனுபவத்துக்கு மிக நெருக்கமாகப் பொருந்துவதை உணர்ந்திருக்கிறேன்.

இனி வரும் எல்லா காலத்திலும் சினிமாவின் ரசனைக்குள்ளும் அதன் அறிவார்ந்த நுட்பத்துக்குள்ளும் நான் செயல்படும் பட்சத்தில் அது அத்தனையும் கார்த்திக்கே சமர்ப்பணம். ஆனால் கார்த்தி எப்போதும் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்வது, ”நான் ஒரு நுனிப்புல் மேய்பவன்” என்றுதான்.
 
 
 

Monday, July 29, 2013

மரணத்தின் வண்ணம்

மீண்ட கனவுகளை
கலைத்துவிட எண்ணி
உரசிச் செல்கிறது
மஞ்சள் காற்று

வெளியெறும் உதிரத்தால்
நிறைந்து தளும்பும்
நாகத்தின் தலைமிதக்கும்
சிகப்புமீன் தொட்டி

புகை தவிர்த்த பெருநெருப்பு 
உடல் முழுதும் பற்றி எரிவதை
விழி சுறுக்கிப் பார்க்கிறது
மூன்றாவது பச்சைக் கண்

காலம் கரைத்துண்ட
இத்தனையும் எளிதில்
அரைத்துச் செரிக்கிறது
என் கருப்பு மரணம்



Sunday, July 28, 2013

சுஜாதாவின் 'சுக துக்கம்' - சிறுகதை பற்றி....

சுஜாதா எழுதிய ‘சுக துக்கம்’ என்ற சிறுகதையை நேற்று அவரின் தொகுப்பிலிருந்து எடுத்துப்படித்தேன். 1997 ல் எழுதியிருக்கிறார். மில் தொழிலாளி ஒருவரின் மரணம் நிகழ்ந்துவிட்டதைச் சொல்லி ஆரம்பிக்கிறது கதை. அது ஒரு தொழிற்சாலை விபத்து. இங்கு கதை சொல்லியாக இருப்பவர் இறந்தவரின் நண்பரான  சக மில் தொழிலாளி ஒருவர். விபத்து நடப்பதற்குச் சற்று முன்பாகத்தான் இறந்தவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருகிறார்.
 
கதை வேறு ஒற்றும் இல்லை. அந்த மரணச் செய்தியை இறந்தவருடைய மனைவியிடம் முதலில் தெரிவிக்க வேண்டி நண்பர் என்ற முறையில் இவரை அனுப்ப நிர்வாகம் முடிவுசெய்கிறது. இவர் தயங்குகிறார். அவ்வளவு தைரியம் தனக்கு இல்லை என்று கருதுகிறார். கெட்ட செய்தியை எடுத்துக்கொண்டு சொல்ல இவருக்கு மனம் ஒப்பவில்லை. ‘அவருடைய வீட்டுக்குப் போய் அவர் மரணச் செய்தியைச் சொல்லுமாறு செய்துவிட்டாயே’ என்று கடவுளிடம் குறைபட்டுக் கொள்கிறார். இருந்தாலும் மேலதிகாரிகளின் நிர்பந்தத்தால் நடந்த விபரீதத்தைத் தெரிவிக்க அனுப்பிவைக்கப்படுகிறார். மிகுந்த மனஉலைச்சலுடன் இறந்த தன் நண்பரின் விட்டுக்குச் செல்கிறார். கதவைத்தட்டுகிறார்.

இதுவரைக்குமான இப்படிப்பட்ட கதையை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஆனால் இதற்குப் பிறகு கதை ஒரே ஒரு வாக்கியத்தோடு முடிவு பெறும். அந்த இறுதி வாக்கியம் தான் இந்தச் சராசரிக் கதையை மிக அபாரமான சிறுகதையாக உருமாற்றம் செய்யும். சுஜாதாவின் இந்த ‘சுக துக்கம்’ கதை ஒரு எளிமையான சிறுகதை ஆக்கத்துக்கு மிகச்சிறந்த உதாரணம்.

மறுப்பு

நீ எப்போதும் போல்
இப்போதும் மறுத்துவிட்டாய்
நான் எப்போதும் போல்
இப்போதும் காத்திருப்பேன்

நீ இப்போது போல்
இனி எப்போதும் மறுத்துவிட்டால்
நான் எப்போதும் போல்
அப்போது இருக்க மாட்டேன்.

Monday, July 22, 2013

வா.மு.கோமுவின் எழுத்தை முன் வைத்து......

வா.மு.கோமுவின் எழுத்தை நான் சந்திக்க நேர்ந்தது சிறுபத்திரிக்கையின் மூலமான வாசிப்பின் போதுதான். எங்கள் கொங்குப்பகுதியின் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய பதிவாகத்தான் அது என் அகத்தில் செயல்புரியத்துவங்கியது. ஆரம்பம் முதலே அவருடைய எழுத்துகள் என்னை எவ்விதத்திலும் அசூசை கொள்ளச்செய்யவில்லை.
காரணம், எங்கள் பகுதியின் வட்டார வழக்கிலும் வாழ்க்கை நடைமுறையிலும் மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ள கதைகளையும் சொல்லாடல்களையும் வாழ்க்கையின் மறுபக்கத்தையும் தான் வா.மு.கோமு வின் எழுத்தில் நான் கண்டடைந்தேன். அவ்வகையான வாழ்க்கைமுறை எனக்கு வாய்க்கவில்லையென்றாலும்கூட அதை அருகிருந்து விழிவிரித்து ஆச்சர்யமாகப் பார்த்து வளர்ந்தவன் என்ற முறையில் அந்த வெள்ளந்தியான குசும்பு கொப்பளிக்கும் வாழ்க்கையின் சாரம் வா.மு.கோமுவின் எழுத்தில் மிகத் துல்லியமாகப் பதிவாகிவந்ததை உணர்ந்தேன்.

வா.மு.கோமுவுடைய எழுத்தின் வீரியம் மிகத் தீவிரமாக வெளிப்பட்டது அவரின் சிறுபத்திரிக்கை தொடர்பான காலகட்டத்தில் தான். அங்கு புரையோடிக்கிடக்கும் புறக்கணிப்பு அரசியல்காரணமாகவும் தன்னுடைய லௌகீக நெருக்கடிகள் காரணமாகவும் மெல்ல வெகுஜன எழுத்துக்குத் தன்னைத் தானே மனவிருப்பமின்றி நகர்த்திக்கொண்டு வந்தவர். சிறுபத்திரிக்கை உலகில் அவர் செரிவுகூட்டி எழுதிய அப்பட்டமான பாலியல் எழுத்துக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகப் போகவே அவர்கள் வா.மு.கோமு மீது பலவகை அவதுாறுகளை மிக நாசூக்காக சந்தியில் உலவவிட்டார்கள். அவர் மீது அவர்கள் சுமத்தும் குற்றம் என்னவென்றால் பாலியலை மட்டுமே தன் எழுத்தில் முன்வைக்கிறார் என்பதே.

அவர் மீதான குற்றச்சாட்டை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன் ஒன்று, 'அவர் பாலியலை எழுதுகிறார்.' இன்னொன்று, 'அவர் பாலியலை மட்டுமே எழுதுகிறார்.'

முதல் விஷயம் சிக்கல் இல்லாதது. பெரிய விளக்கம் தேவையில்லாதது. காரணம், இலக்கியத்தில் பாலியல் சார்ந்த எழுத்தும் ஓர் அங்கம் என்பது இலக்கியம் உணர்ந்த அனைவருக்கும் தெரியும். பாலியல் சார்ந்தும் தவிர்த்தும் எழுதுவதென்பது அவரவர் தேர்வு மற்றும் திறன் சார்ந்தது.

இரண்டாவது விஷயம்தான் முக்கியமானது. இலக்கியம் என்பதே அனுபவங்களின் கடத்தல் தானே. தத்தமது திறனுக்குத் தக்கவாறு கைகூடும் வடிவவகைகளில் அனுபவங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. மனிதமனம் மிகுந்த நுட்பம் கொண்டது. சிடுக்குகள் நிறைந்தது. பாலியல் அனுபவம் என்பது மனித மனத்தின் பல்வேறு அடுக்குகளில் மிக சூக்குமமாக நிகழக்கூடியவை மட்டுமல்லாது ஒப்புமைப்படுத்த முடியாதவையும் கூட. எல்லோருக்குள்ளும் நிகழும் அந்த அனுபவங்கள் ஒரு கலைஞனுக்குள்ளும் நிகழ்ந்து அவன் மூலம் அது கலையாக வெளிப்படும் போது அதன் துாலவடிவம் எளிதில் புரிபடாத புதிர்த் தன்மை கொண்டதாகவே இருக்கும்.

வா.மு.கோமு வின் பாலியல் தொடர்பான கலை வடிவங்களைப் பற்றிய புரிதலோ அவரை எதிர்கொள்ளத் தேவையான மனவார்ப்போ இல்லாமல் அவரை அணுகுவது அவருக்கும் சரி நமக்கும் சரி இரண்டு தரப்புக்குமான மன அடுக்கைச் சீர்குலைக்கவே செய்யும்..

வா.மு.கோமு என் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இருப்பவர் அல்ல. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் இருந்திருக்கிறேன். அவரை அவதானித்திருக்கிறேன். அவரின் எழுத்து வேலையை அருகிருந்து பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு பித்து நிலையில் தன் கதைகளை எழுதக்கூடியவர். படைப்புகளை எழுதிவிட்டுச் செப்பனிட்டுத்திருத்தும் அவசியமில்லாது கற்பனையின் பிரவாகத்துக்கு ஒத்திசைந்து தன் எழுத்தை நேரடியாக இயங்க விடுபவர். அவரை அவர் போக்கில் இயங்க விடுவோம். தமிழ் இலக்கியம் அவருடைய எழுத்து வகைக்கும் இடம் கொடுக்கும் என்று அதன் வரலாறு நெடுகிலும் உதாரணம் வைத்திருக்கிறது. அவருடைய எழுத்தில் உடன்பாடில்லாதவர்கள் சற்று ஒதுங்கிக் கொள்வோம். தயவுசெய்து வா.மு.கோமுவுக்கு நாம் ஆடைகளை அணிய முயற்சிக்க வேண்டாம். அவர் நிர்வாணத்தை விரும்புகிறவர்.

Friday, July 5, 2013

சாரி டாடி - குறும்படம் பற்றி….


திரைமொழி நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது. வாய் மொழியின் தேவையின்றி காட்சிகளால் அடுக்கப்பட்ட அற்புதமான திரைக்கதை. பின்னணியில் டிவியின் சப்தம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டு வந்து, அந்தப் பெண் சட்டைப் பையில் கையை விட்டு எடுத்த உடனே இசையை ஆரம்பிக்கும் நுட்பம் வியக்க வைக்கிறது. பொருத்தமான ஷாட்கள், லைட்டிங், கலரிங் என்று ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் மிக அருமை. குப்பைத் தொட்டியில் தந்தையின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் சிகரெட் பாக்கட் காட்டப் படுவது பார்வையாளருக்கு கவனப்படாமல் விடுபட்டுவிடுமோ என்ற மிக அவசியமான தேவை கருதி மீண்டும் ஒரு கட் ஷாட் மூலம் அந்தப் பெண் எடுப்பது சிகரெட் பாக்கட் தான் என்று முழுமைபெருகிறது. ”சாரி டாடி” குறுப்படத்தின் இயக்குநர் அரவிந்த்.ஜி.வி க்கு வாழ்த்துகள்.


படக்காட்சி இணைப்பு  : http://www.youtube.com/watch?v=J7WOOwhAlHA
 

நந்தினியின் அப்பா - சிறுகதை பற்றி...

இப்போதெல்லாம் நான் சிறுகதைகள் படிப்பதே இல்லை. வேளைப் பளுவின் அழுத்தம் காரணமாக நீண்ட நாட்களாகப் படிப்பைச் சற்று தள்ளியே நிறுத்தியிருந்தேன். இன்று சுஜாதா செல்வராஜின் கதை ஒன்றை “கல்கி“யில் (07.07.2013-இதழ்) படிக்க முடிவானது. என்னைப் படிக்கத்துாண்டியது “நந்தினியின் அப்பா” என்ற கதையின் தலைப்பு.. இந்தத் தலைப்பு எனக்குள் ஏற்படுத்திய ஆர்வத்துக்குக் காரணம் நானும் கூட ஒரு நந்தினியின் அப்பாதான். ஆம் என் மகள் பெயர் நந்தினி.

 
ஆறாம் வகுப்புப் படிக்கும் நந்தினியின் வயதுக்கே உரிய பால்யகால நினைவுகளோடும் தன் தந்தையைப் பற்றிய துயரம் கவியும் நினைவுகளோடும் பயணிக்  கும் இந்த சிறுகதை கிராமக்களத்தில் நிகழும் ஒரு தவிர்க்க முடியா நிதர்சனத்தின் பதிவு.

 
கிராமப்புறங்களில் உள்ள எத்தனையோ மனிதர்கள் தங்களின் நடுநிலை தவறா நேர்மை மனத்தாலும் வாக்குமாறா நாக்கு சுத்தத்தாலும்  தங்களைச் சற்றியுள்ள சக மனிதர்களின் மனதில் மிகப்பெரிய அன்பையும் மரியாதையையும் பெற்றிருந்த போதிலும் சிலபல தீயபழக்கங்களால் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தீராத் துயரில் ஆழ்த்திக் கொண்டிருந்துவிட்டு வடுக்களோடு மறைந்து போயிருக்கிறார்கள். . கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. “சைனம் சொல்லும் பல்லி சோற்றுப் பானையில் விழுந்தது” என்று. அப்படிச் சோற்றுப் பானையில் விழுந்த ஒரு பல்லிதான் சுஜாதா செல்வராஜ் தன் எழுத்தின் மூலம் நம் கண்முன்னே உலவவிடும் “நந்தினியின் அப்பா”.

 
நடப்பு நிகழ்வுகளுக்கும் நடந்த நினைவுகளுக்குமான காட்சிமாறுதல்களில் லாவகமாகத் தடம் மாறும் எழுத்து நடை, சிறுகதைகளுக்கே உரிய துல்லியமான காட்சிச் சித்திரம், சிதறாத மையம், கதையை முடிக்கும் இடத்தில் இருந்து வாசகரின் கற்பனைக்கு இடம் கொடுத்து மீண்டும் அவர்கள் மனதில் கதையைத் தொடரச் செய்யவல்ல நுட்பம் என்று சுஜா வின் எழுத்துத் திறன் போற்றுதலுக்குரியது. அவர் கதைகளை நான் முன்னம் படித்ததில்லை. அவர் நிறைய எழுத வாழ்த்துகள்.

Friday, May 17, 2013

பச்சைநீர்

எங்கிருந்தோ வந்தமர்ந்த
பறவை நான்
என் அலகு உனக்குள்
இறங்கிய மறுகணமே
தெரிந்துவிட்டது
பச்சயம் வற்றிப்போன
பட்ட மரம் நீ என்று

வெந்நீர் உற்றப்பட்ட
உன் வேர்களுக்கு
துளிர்க்கும் ஆசை
துளியளவு இருப்பினும்
எங்கிருந்தேனும் வந்துசேரும்
உனக்கான பச்சைநீர்

Sunday, May 12, 2013

அந்திநேரம்

ஒளிக்குள்
நிகழ்ந்த
கலப்படம்

அம்மா என்னும் வார்த்தை

பித்துக்குப் பிறந்து
தத்துக்கு வளர்ந்து
கத்துக்குப் பால் குடித்து
கவனிப்பாரற்றுக்
கிடந்த எனக்கு
அம்மா என்பது
வெறும் வார்த்தைதான்



-அன்னையர் தினத்தன்று எழுதியது

நேசம்

உனக்கு நானும்
எனக்கு நீயும்
ஊட்டிய சோற்றில்
எச்சில் போலக்
கலந்திருக்கிறது
உனக்கும்
எனக்குமான
நேசம்

பாதை

உன்
நெற்றியில் திரண்டு
காதருகே வழிந்து
கழுத்தில் இறங்கும்
வியர்வைத்துளி்
உருவாக்கிச் சென்றது
எனக்கான ஒரு
ஒற்றையடிப்பாதையை

Thursday, May 9, 2013

வெளிச்சம்

அந்திநேரத்து
வெளிச்சத்தைச் சிறகுகளால்
வழித்துக் கொண்டு
கூடுதிரும்பும் பறவைக்குத் தெரியும்

மீண்டும் அதிகாலை
தானே அதைக் கொண்டுவந்து
இந்த வெளியில்
விசிறியடித்துவிட்டுச்
செல்வோம் என்று.

சுத்தம்

வெட்டப்படாத சிகை
சற்றே அழுக்கேறிய நகஇடுக்கு
துவைக்கப்படா ஜீன்ஸ் குர்தா
ஒழுங்குபடுத்தப்படா அறை
ஆனாலும் சுத்தமாகத்தான் நீ !!

வலி

வார்த்தைகளுக்கு இடையில்
இட்டு நிரப்பிய
மௌனத்திற்குள் மறைந்திருந்தது
வாழ்க்கையின் வலி.

Tuesday, January 29, 2013

வாடிவாசல் - குறுநாவல் பற்றி...


கருணையை வேண்டி நிற்கும் மிருகம்

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் குறுநாவலை நான் படிக்க துாண்டியது எது என்று நினைத்துப்பார்க்கிறேன். நமது சமகால இலக்கிய ஆளுமைகளின் சிபாரிசுப் பட்டியலில் இடம்பெறும் முக்கிய ஆக்கம் என்பதாலோ அல்லது சி.சு.செல்லப்பா பற்றி நான் அறிந்து வைத்திருந்த உணர்ச்சியூட்டக்கூடிய தகவல்களின் அடிப்படையில் அவரைப்பற்றி எனக்குள் உருவாகியிருந்த ஆர்வத்தினாலோ கூட இல்லை.
 
ஜல்லிக்கட்டை நான் ஒருவித ஜீவகாருண்யக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே புரிந்துவைத்திருக்கிறேன். தமிழ்சினிமா ஜல்லிக்கட்டைப் பற்றித் தந்த நாடகத்தனமான சித்திரங்களாகவும் பொங்கல்நாளன்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி சுவாரஸ்யத்துக்காகக் காட்டப்படும் மேம்போக்கான வீர சாகச நிகழ்வாகவுமே ஜல்லிக்கட்டு என் அகத்தில் பதிவுகொண்டிருந்தது. சமீபமாக புத்தகக் கடையொன்றில் தேடல் படலத்தின் போது ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் என் கண்ணில் பட்ட ஒரு பழைய விளம்பரம் அந்த புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 
அந்தப் புத்தகம் காலச்சுவடு பதிப்பாக வந்த ‘வாடிவாசல்‘ குறுநாவல்.1959 ம் வருடம் செப்டம்பர் மாதம் தான் நடத்திவந்த ‘எழுத்து என்ற சிறுபத்திரிக்கையில் வாடிவாசல் குறுநாவல் பற்றி சி.சு. செல்லப்பா கொடுத்திருந்த விளம்பரம் அந்தப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் அச்சாகியிருந்தது. அது:
 
ஜெல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புயவலு தொழில்நுட்பம், சமார்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். நான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக்கொண்டிருக்கும். காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை.
 
மேற்கண்ட விளம்பரத்தில் காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை என்ற இரண்டு வாக்கியங்களும் எனக்குள் இனம்புரியாத உத்வேகத்தை உண்டாக்கி வாடிவாசலைப்பற்றிய ஆர்வத்தைத் துவக்கின. விளம்பர வரிகளிலேயே இவ்வளவு சுவாரஸ்யம் கூட்டியிருக்கும் சி.சு.செல்லப்பா ‘வாடிவாசலை‘ எங்கணம் சமைத்திருப்பார் என்ற உணர்வு மேலிட படைப்புக்குள் நுழைந்தேன்.
 
ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வைத் தன் தேர்ந்த காட்சிச்சித்தரிப்பு வழியாக நம் மனக்கண்ணுள் விரியவிட்டு காளைகளை ஒரு புறமும் காளை அணைபவனை மறுபுறமும் நிறுத்திப் புனைவை விரிய விடுகிறார் செல்லப்பா. வரையறுக்கப்பட்ட ஒரு கதைத் திட்டத்துடன் முறையான கால இடைவெளியில் அவர் உருவாக்கி இறக்கிவிடும் கதாபாத்திரங்கள் கதையின் விரிவுக்கும் முடிவுக்கும் கச்சிதமாகப் பங்காற்றுகின்றன.
 
மதுரை ஜில்லாவின் ஒரு கிராமத்தில் ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வதற்கான ஆயத்தங்கள் துவங்குகின்றன. ஜனங்கள் ஆர்வமுடன் திரள்கிறார்கள். மாடுகளும் மாடுஅணைபவர்களும் வந்து கூடுகிறார்கள். அது அந்தப் பகுதியின் ஜமீந்தார் ஒருவரால் முன்னின்று நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. அந்த ஜமீனுடைய காளைகளும் அதில் கலந்து கொள்ள இருக்கின்றன. அவை யாராலும் அடக்க முடியாத பயிற்சியும் தினவும் ஏற்றப்பட்ட காளைகள். பக்கத்து ஊரைச் சேர்ந்த மாடு அணையும் வீர இளைஞர்களான பிச்சியும் அவனுடைய சகபாடி மருதனும் அதில் கலந்து கொள்ள வருகிறார்கள்.  அவர்களின் நோக்கம் வாடிவாசலில் புகுந்து புறப்படும் ஏதோ சில மாடுகளை அணைவதல்ல. ஜமீந்தாரின் மாடுகளுள் மிக உக்கிரமானதும் வெறியேறியதுமான, செல்லப்பாவின் வார்த்தைகளில் சொல்வதானால் கருப்புப் பிசாசு‘ என்று வர்ணிக்கப்படும் ‘காரி‘ என்னும் காளையை அணைந்து அடக்குவதேயாகும். ‘காரி‘ மீதான அவர்களுடைய துல்லியமான இலக்கும் அந்த இலக்கின் நோக்கத்திற்கான தார்மீகக் காரணமும் தான் கால ஒருமையைக் கைகூட வைத்துப் புனைவை சிலாகிப்பின் உச்சத்திற்கு எடுத்துச் செல்கின்றன.
 
 
மிக இயல்பாக ஆரம்பமாகி லயத்தோடு நகரத்தொடங்கும் கதை, பிச்சி தான் எதிர்பார்த்து வந்த ‘காரி‘ யைக் கண்ணில் கண்டவுடன் மாயவித்தை புரிந்து சடுதிநேரத்திற்குள் நம் மனோவேகத்தை முடுக்கிவிட்டு சிலிர்ப்பான வாசிப்பனுபவத்தைத் தரத்துவங்குகிறது. இப்படி ஆரம்பமாகிறது அது:
 
பட்டத்து யானைக்குப் படாம் போர்த்தின மாதிரி பல வர்ணப்பட்டு, ஜரிகை, ஜிகினா இவைகளால் ஆன சிங்காரப் பொன்னாடை திமிலுக்கு முன்னிருந்து புட்டாணி வரைக்கும் முதுகோடு படிந்து இருபுறமும் மணிக் குஞ்சலங்களுடன் தொங்க, ஒரே புஷ்பாலங்காரமாக ஜல் ஜல் என்று சலங்கை மாலையும், கொம்பு, கால் சதங்கைகளும் அசைவுக்கு அசை விட்டு விட்டு ஒலிக்க, நாட்டியக்காரி மேடைக்கு வருகிற மாதிரி நிமிர்ந்து நிமிராமலும் முகம் லேசாகத் தணித்து, கண்கள் கீழ் நோக்கி இரு பக்கமும் பார்க்க, கம்பீர நடை போட்டு அமரிக்கையாக வந்து நின்றது காரி. தொழுவத்தில் அதன் அவங்காரங்கள் கலைக்கப்பட்டு உள்வாடிககுக் கொணரப்பட்ட காளை ஒரு தடவை முக்காரமிட்டு அடைப்புக்குள் வந்தது.
 
       ”கருப்புப் பிசாசு டோய்……” கூட்டம் ஆர்ப்பரித்தது.
 
கத்திய அத்தனை குரல்களிலும் ஒரு நடுக்கம், திகில் வெடித்துப் பரவியது. வாடிவாசல் அமர்க்களப்பட்டது. சில விநாடிகளில் வாடிவாசலில் முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை. காரி கொம்புக்கு எட்டாதபடி எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்வதேன்று தவித்து அவனவன் அங்குமிங்கும் ஓடிப் பதுங்கப் பார்த்தான். துடைத்துவிட்ட மாதிரித் திட்டிவாசல் குழப்பமின்றி விஸ்தாரமாகியது. எந்தக் காளைக்கும் காட்டாத மரியாதை கொடுத்து ஆற்று நோக்கிய பாதையை விசாலப்படுத்தி காளை தன் போக்கில் போக வழிவிட்டு பிளந்து நின்றது கூட்டம். இரண்டாவது வரிசையில் நிற்கவே ஒவ்வொருவரும் தவித்தனர்.
 
 
தனக்கு முன் நெருக்கி வந்து நின்றவர்களை முண்டித் தள்ளிவிட்டு நகர்ந்து முன்வந்து பிச்சி அதை வெறியோடு பார்த்தான். அப்பனைக் காரி கொந்தி எறிந்தபோது தான் சற்றுத் தள்ளி நின்றது ஞாபகம் வந்தது. அப்பன் குடல் வெளியே வந்தபோது ஊற்றாக பெருகி வழிந்த ரத்த வாசனை இப்போது அவன் மூக்கில் நெடியேறிற்று. காளையின் கொம்புகளுக்குக் கண்களைத் திருப்பினான். கொம்பில் அப்பன் ரத்தம் இன்னும் வழிந்து கொண்டிருப்பது போல் அவனுக்குப் பிரமை ஏற்பட்டது. அந்தக் கொம்பிலிருந்து ஒரு வீச்சம் அவன் மூக்கில் அடித்த மாதிரி, மூக்கை ஒரு தடவை சிணுங்கி மூச்சை வெளியே தள்ளினான்.
 
அதற்குப்பின்னான கதையாடல் ஒரு மிகச்சிறந்த உலக சினிமாவின் அனுபவத்துக்கு இணையானவை. பிச்சிக்கும் காரிக்குமான திகிலுட்டும் நேருக்கு நேர் மோதலை நுட்பமான எழுத்தின் வழியே பதைபதைப்புக்குள்ளாக்கும் காட்சிச் சாத்தியமாக்குகிறார் செல்லப்பா.
 
ஒரு கட்டத்தில் ‘காரி‘ யைப் பிச்சி சாதுர்யமாக அணைந்து விடுவான். காளை திமிரித் தரையிலிருந்து மேலேழும்பிக் குதிக்கும். மூன்று முறையான குதிப்பில் அதன் உடலோடு ஒட்டிக் கட்டிக்கொண்டிருக்கும் பிச்சியும் சேர்ந்து மேலேழும்புவான். ஒவ்வொரு தடவை காரி தன் உடலை மேலேழுப்பிக் கிழ்இறங்கிக் கால் ஊன்றும் போதும் அதன் மூர்க்கத்தையும் அப்போது காரியின் உடலோடு ஒட்டியிருக்கும் பிச்சியின் அலைகழிப்பான நிலையையும் ஸ்லோமோசன் தொழில்நுட்பத்தோடு மிக நிதானமாக விவரித்திருப்பார். அப்போதுகூட அனல் பறக்கும் அந்த மொத்தக் காட்சியையும் வேகம் துளியளவும் மட்டுப்படாமல் நகர்த்திச் செல்வார்.
 
மேலோட்டமாகப் பார்த்தால் மிருகத்திற்கும் மனிதனுக்குமான மோதலாகத் தெரியும் ஜல்லிக்கட்டு, மனிதனுக்கும் மனித மனதுக்குமான மோதலாகவே வழிநெடுகிலும் இதில் உணர்த்தப்டுகிறது.. பிச்சியைப் பொருத்த வரை தான் தந்தைக்குச் சமர்ப்பிக்கும் வெற்றியாகவும் ஜமீந்தாருக்குக் கர்வமிகு ஜமீன் அடையாளமாகவும் கிழவனுக்கு ஊர் மற்றும் சாதிப் பெருமையாகவும் முருகுக்கு விசுவாசத்தை காண்பிக்கும் வாய்ப்பாகவும் காளை இதில் அனைவராலும் குறியீடாக்கப்பட்டு வதைக்கப்படுகிறது. கடைசியில் நம்மிடம் கருணை வேண்டி நிற்பது இது எதுவுமே அறியாத அந்த மிருகம் மட்டுமை. செல்லப்பாவே சொல்வதைப்போல் காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை

 
புத்தகம் : வாடிவாசல்
ஆசிரியர் : சி.சு.செல்லப்பா
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம். போன் : 04652 278525