Monday, April 18, 2011

ஏழாம் உலகம் - நாவல் பற்றி....

துயரங்களின் அணிவகுப்பு

ஒரு முன் குறிப்பு : இது நான் கடவுள்திரைப்படம் வெளிவருவதற்க்கு முன்னால் எழுதப்பட்டது.

இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்து விட்டு இரவு பதினொரு மணிவாக்கில் படுக்கைக்குச் சென்று படுத்தபோது என் மனமும் உடலும் ஒரு சேர நடுங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்குள் ஏதோ முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டுமிருந்தேன். அருகில் படுத்திருந்த என் மனைவி என்னை எதேச்சையாக கட்டியணைக்க என் உடல் நடுங்குவது கண்டு 'என்னங்க என்னாச்சு?' என்றாள். நான் தொடர்ந்து சில விசித்திரமான ஒலிகளை எழுப்பியபடி இருக்க அவள் மேலும் என்னை இறுக அணைக்க முற்பட்டாள். சற்று முன்பு முத்தம்மையைக் கூனன் அணையும் அந்த பயங்கர சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நான் ஆவேசமான மனஎழுச்சியுடன் விலகி, அவளைத் தள்ளிவிட்டு சட்டென்று எழுந்து அமர்ந்தேன். அது நாவலின் பாதிப்பு என்று என் மனைவிக்குத் தெரிந்த பிற்பாடுதான் ஆசுவாசம் அடைந்தாள். இவ்விதம் எனக்குள் ஆழ்ந்த அதிர்வை, சலனத்தை ஏற்படுத்திய இந்த நாவலைப் பற்றி யாருடனாவது பகிர்ந்து கொள்ளும் போது மட்டுமே என் மனநிலை சமநிலையாகும் என்பதால் உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.
இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று நினைத்தாலே மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகிறேன். காரணம் ஏழாம் உலகத்தின் உக்கிரம் அப்படி.

இந்த நாவலை போத்திவேலுப் பண்டாரம் எனும் ஈனத்தொழில் புரியும் மனிதனைப் பற்றிய ஒரு வாழ்கைப் பதிவு என்று கொள்ளலாம். அல்லது மனித உடலுடன் நடமாடும் சில கொடூர மிருகங்களின் கைகளில் சிக்கிய, ஊனமுற்ற குறைப்பிறவிகள், பெரு நோயாளிகள் சொல்லெனாத் துயரங்களை அனுபவித்தபடி  தங்கள் உயிரைத் தாங்கிக் கொண்டு அந்த மிருகங்களின் தொழிலுக்கு  இரையாகிப் பின் மடிந்தொழியும்  நிஜத்தைச் சீழ் வடிய, இரத்தம் கசிய, பீ வாடையடிக்கச் சொல்லும் இருண்ட தொகுப்பு என்றும் கொள்ளலாம்.

போத்திவேலுப் பண்டாரம் எனும் மனிதன் ஒரு கொடூரமான ஈனத் தொழிலைக் கூட ஆத்ம சுத்தியுடனும் அதற்கே உரிய நேர்மையுடனும் பல இடர்பாடுகளை எதிர்கொண்டு செய்யும் விதத்தையும், அவருடைய இயல்பான குடும்ப சூழ்நிலை, மகளின் திருமணம், குழந்தைகள் மேல் உள்ள பரிவு, தனிப்பட்ட ஆசாபாசங்கள், போன்ற வாழ்வியல் எதார்த்தங்களையும், அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குறைப்பிறவிகளின் துன்பத்தையும்  உடல் வேதனைகளையும் மனவேதனைகளையும் அவர்களின் சந்தோஷங்களையும் காதல், காமம், பாசம், நம்பிக்கைகள் போன்ற உணர்வுகளையும்  முதலாளி விசுவாசம், ஜாதிய உணர்வு, மதஈடுபாடு போன்ற குணங்களையும் மற்றும் பல அமானுஷ்ய சூழ்நிலைகளையும் தனக்கே உரிய எழுத்து வன்மையால் காட்சிச் சித்திரமாக்கி நம் மனக்கண்முன் உலவ விடுகிறார் ஜெயமோகன்.

எந்த ஒரு கொடூரமான மனிதனுக்குள்ளும் இறை எனும் மாபெரும் ஆற்றல் பொதித்து வைத்திருக்கின்ற  அறம் சார்ந்த அடிப்படைகளும் அவனுடைய சமூகம் அவனுக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற ஒழுக்க விதிகளும்  மனசாட்சியின் ரூபமாக இருந்து அவனுடைய செயல்களை அளவிடும் மாபெரும் உண்மையை ஒரு நட்சத்திர மிணுங்களில் உணர்த்தி, அந்த மிணுங்களைப்  பண்டாரம் சந்திக்கத் திராணியல்லாமல் புறக்கணிப்பதில் கடவுளுக்கும் மிருகத்துக்கும் இடைப்பட்ட மனித மனத்தின்  நிலையைத் துல்லியமாக்குகிறார்  ஜெயமோகன்.

முத்தம்மையின் பிரசவத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது அவர்களின் உடல் வேதனையும் மனவேதனையும். டெம்போவில் உயிருள்ள உடல்கள் அடுக்கப் படும்போது அவர்களின் பயணம் எப்படியிருக்கும் என்று நினைத்து ஒரு கணம் கண் மூடினேன். லாரிகளில் ஏற்றி மாடுகளையும் எருமைகளையும் கேரளாவுக்கு அடிக்கக் கொண்டு செல்லும் காட்சியைக் கண்டு, அவைகளின் வலியை எண்ணிக் கண்ணீர் விட்டு அழுதவன் நான். அப்படிப்பட்ட எனக்கு இந்த நாவலில் மனிதர்களே அப்படிக் கொண்டு செல்லப்படும் போது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.
முத்தம்மையை அவளுடைய பிறப்புறுப்பில் இருந்து வழியும் இரத்தத்தைக் கூட பொருட்படுத்தாமல் 'வயறு வலுக்குதே' என்ற அவளின் கதறலைக் கேலி செய்துவிட்டுக் கைகால்களைக் கட்டி மலைமேல் ஏற்றும் போது துவங்கியது என் அதிர்வு. அவள் குழந்தையை வெயிலில் போட்டு அதன் மேல் தண்ணீர் ஊற்றி அதைச் சந்தைப்படுத்தும் போதும், மனித மிருகங்கள் உடல் வேட்கையைத் தனிக்க இரண்டு கால்களும் இல்லாத எருக்கை தூக்கிக் கொண்டு சென்று பயன்படுத்தும் போதும், அதனால் அவள் முதுகெலும்பு மேலும் பாதிப்படையும் போதும், தொரப்பன் குழந்தையைத் தொட்டுப்பார்க்கத் தேடியலைந்து வழிமாறிவிட, அதனால் அவனுக்கு விழும் அடியிருக்கிறதே... அந்த ஆரம்ப அத்தியாயங்களிலேயே புரிந்து போயிற்று எனக்கு நாவலின் வீரியம் என்னவென்று.

உடல்வேதனை மட்டுமா அவர்களுக்கு?  ஒவ்வொரு முறையும் குழந்தை பெற்று சிறிது நாள் அதைச் சீராட்டி, பாலூட்டி, பேர் வைத்து, தொட்டு ரசித்து, முகர்ந்து, உருகி வளர்த்த குழந்தையைச் சரியான கால இடைவெளி விட்டுப் பிரித்தெடுத்து விற்றுவிட்டு, மீண்டும் மீண்டும் அவளை வேறு ஒரு குறைப்பிறவியோடு அணையவிட்டுக் குறையுருவைப் பெற்றெடுக்க வைத்தபடியே இருக்கும் போது, இவள் போன்ற முத்தம்மைகளை நினைத்து அயர்ச்சி கொள்வது தவிர வேறென்ன செய்து விட  முடியும் நம்மால்.

நமக்கெல்லாம் மனமுண்டு. அதற்கும்  வேதனைகள் உண்டு. ஆனால் அந்த பரிதாபத்துக்குரியவர்களின் வேதனைகளை உணர்ந்தால் நாமெல்லாம் அனுபவிப்பது வேதனையல்ல,வேதனை எனும் பெயரில் நாமாகச் செய்து கொள்ளும் கற்பிதங்கள் என்று புரிபடும்.

இவர்களுக்கும் சில   சந்தோஷங்கள் உண்டு.  ஆனால் அது நிரந்திரமானது அல்ல  என்பதுதான் கொடுமையே.   இருப்பினும்  அவர்களுடைய சந்தோஷங்களும் கொண்டாடப்படுகின்றன. 'வயசு முத்திப்  பளுத்தாலும் செரி,  சீக்கு  வந்து சீறலுஞ்சாலும் செரி, ஆம்பளை கண்ணுல ஆச எறங்காது' என்று உடல் தேவைகளின்  எதார்த்தங்கள் இங்கு அழகாகக் கலையாக்கப்படுகின்றன.
                      
'மொகம், சுண்டு, நெஞ்சு, வயிறு, காலு, ஏன் காலில் உள்ள மண்ணைப் பாக்கப்பிடாதோ? எல்லாம் அளகுதான். பாக்கிற மாதிரி பாக்கணும்' என்று அவர்களின் ரசனைக்கும் உயிர் கொடுக்கப்படுகிறது. எருக்கின் ஒருதலைக் காதலும், அகமது குட்டியின் கண்ணீர் காதலும் இதில் கவனிக்கப்பட வேண்டிய உணர்வுகள். தனது ஒவ்வொரு பேச்சையும் சந்தோஷச் சிதறலாக வெளிப்படுத்தும் குய்யனின் நக்கல்கூட அவனுக்கு மட்டுமல்ல அவனைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சந்தோஷத்தையே தருகிறது.  

இங்கு குழந்தைப் பாசம் அளவிட முடியாதபடிக்கு  முத்தம்மையின் மூலம் மெய்ப்பிக்கப்படுகிறது. குழந்தைக்கு கெடுதல் என்று தெரியவந்தவுடன் பீடி பற்றவைக்க மறுக்கிறாள்.  மயக்கமான நிலையிலும்   கூடத் தன்   குழந்தையை இருக   கட்டி அணைத்துக் கொள்கிறாள்.   குழந்தையைக்   கடிக்க வரும்   நாயின் குரல்வளையைக் கடித்துத் துப்புகிறாள்.
'முலை கடிக்கும்பம்.  கடிச்சா வலிக்கும் பாத்துக்கொ அப்பம் அது நம்மகிட்ட என்னமோ சொல்லுத   மாதிரி  இருக்கும்என்ற உருகலில் அவள் பாசமும் சந்தோஷமும் ஒருசேரத்ததும்பி வழிகிறது.

இந்த நாவலில் கூர்ந்து கவனித்து உள்வாங்கி ரசிக்க பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் சில....

  • பேப்பரை படித்து யாரும் புரட்சிவாதி ஆகிறது இல்லை. பேப்பர் ஒரு மாதிரி கஞ்சா தான்.
  • மனுசன மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?
  • சேர்ந்து சிரிக்கிற சந்தோஷம் பத்து ரூபாய்னாக்கா சேர்ந்து அழுவுற சந்தோஷம் நூறு ரூபாய்க்கு சமம். அதெல்லாம் அறிஞ்சவன் அறிவான்.
  • நிரபராதிக்கு சர்க்கார் பயம் இல்லை, போலீசு பயம் இல்லை, சாமி பயமும் இல்லை.
  •  மாங்காண்டி சாமியின் பாடல்கள்.
  •  'பனிவிழும் மலர் வனம்... ' பாடல்.
என்று சொல்லிக் கொண்டே போகலாம். பிறகு முழு நாவலையும் மீண்டும் நகல் எடுக்கும்படி ஆகிவிடும். மேலே குறிப்பிட்ட விஷயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும்  குறைந்தது இரண்டு பக்கங்களாவது விவரித்து அலசும் அளவில் தான் அதன் அழகியலும் எழுத்தாக்கமும் அமைந்துள்ளது. 

நாவலின் போக்கில்  நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு துயரத்துக்கும் நம்மைத் தயார்படுத்தி,  அதனுடன் கலந்து மெல்ல ஆசுவாசம் அடையும் போது சட்டென்று  நம்மை விதிர்விதிர்க்க வைக்கவே அடுத்த துயரம் தயாராகக் காத்திருக்கின்றது.

அவ்விதம் நான் விதிர்விதிர்த்த துயரங்கள்....
  •  யாருமற்ற இரவில், பனியின் வெடவெடப்பில் நிராதரவாய்,பிரசவ வலியில் துடித்துப்  பிள்ளை பெறும் போது முத்தம்மை என்னை முதன்முறையாக அதிரவைத்தாள்.

  • பிச்சைக்கு மட்டுமின்றி சில மிருகங்களின் இச்சைக்கும் ஈடுகொடுக்கும் அந்த        இரண்டு கால்களும் இல்லாத எருக்கு இரண்டாவது முறையாக என்னை அதிரவைத்தாள்.

  • வெய்யிலின் வெட்கையை அறியாத உயிரினங்கள் அனேகமாக உலகில் இல்லை. சுட்டெரிக்கும் சூடுக்கு ஈடுகொடுக்க முடியாமல் உயிரையே விட்ட கதைகள் நம்மிடம் உண்டு. ஆனால் ஒரு சிசுவுக்கு ஏற்படும் அந்த வேதனையை எழுத்தில் படித்துணர்ந்த போது மூன்றாம் முறையாக அதிர்ந்தேன்.

  • நாவலில் இன்னொரு இடம் வருகிறது. பண்டாரத்தை ஒருவன் அழைத்துச் சென்று விற்பனைக்காக சில உருப்படிகளைக் காட்டுவான். நல்ல இளம்பிஞ்சுக் குழந்தைகளைத் திருடி, கண்களைப் பிடுங்கி உறுப்புகளைச் சிதைத்து ஆசிட் ஊற்றி முகத்தைக் கருக்கி மருந்து கொடுத்து மயக்கமாக்கி படுக்க வைத்திருப்பார்கள் பாருங்கள். அய்யோ... அரண்டுவிட்டேன். என் குழந்தையே அங்கு படுத்திருப்பதாய் உணர்ந்தேன். நெஞ்சு துடிப்பது நின்று போனது அக்கணம்.

  •  எல்லாவற்றிற்கும் மேல் மொத்த உயிரையும் உறிஞ்சி எடுப்பதைப்போல் இருந்தன இறுதி அத்தியாயம். கடைசியில் முத்தம்மையுடன் அணைய விடுவார்கள் பாருங்கள் ஒரு ஒற்றைவிரல் குருட்டுக் கூனனை... . 'ஆனா ஒண்ணு சொல்லுதேன் அக்கா, தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன். எனக்க பிள்ளையை தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்' என்று முத்தம்மை முன்பு ஒரு முறை கூறியது அப்போது ஞாபகம் வந்தது.  அய்யோ அது மகா பயங்கரமடா சாமி.



இனியும் ஒருமுறை முத்தம்மையின் கடைசி அணைவை நினைக்க எனக்கு மனதிடமும் போதாது. கற்பனை என்பது பலர் நினைப்பது போல் நடக்காத ஒன்றை, இல்லாத ஒன்றை உருவகப்படுத்துவதல்ல. நமக்கு தெரியாமல், நாம் அறியாமல் நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை உள்ளது உள்ளபடி உணர வைக்கும் திறமையே. அவ்விதத்தில் ஜெயமோகனின் திறமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அன்புடன்,
வீரா


சொல்வதற்க்கு இன்னும் ஒன்று....

உருப்படிகளைத் தவிர எத்தனையோ பாத்திரங்கள் இந்நாவலில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றைப் பற்றியும் அதன் குணாதிசயங்கள், அவற்றின் குறியீட்டு நோக்கங்கள் சார்ந்து நிறைய விஷயங்கள் எழுத முடியும். ஆனால் இதில் ஒரு பாத்திரத்தை அதன் நோக்கம் சார்ந்து குறிப்பிட்டேயாக வேண்டும். அது பகடை எனும் பிணம் அப்புறப்படுத்தும் தொழிலாளியின் பாத்திரம். 500 ரூபாய்க்கு கூட கொலை செய்யத் தயாராக இருக்கும் பாத்திரங்களுக்கு மத்தியிலும் 'பாவம், பெரும்பாவம்' என்று 100ரூபாயை தட்டி விட்டு, தவறு செய்யத் துணியாத நேர்மை மனம் அவருக்கு. அவர் பொருட்டு இங்கு எல்லோர்க்கும் பெய்யும் மழை.




புத்தகம்       : ஏழாம் உலகம்
ஆசிரியர்    :  ஜெயமோகன்
வெளியீடு : யுனைடெட் ரைட்டர்ஸ், தமிழினி, கிழக்குப்பதிப்பகம்.




Thursday, April 14, 2011

ஞாபகம்

புதைத்த ஆசைகள்
முளைத்துச் சிரிக்கின்றன

சடலப் பூக்களாய்

உயிரற்ற சிரிப்பில்
மௌனமாய் வந்து போகிறது
உன் ஞாபகம்   

 

Tuesday, February 15, 2011

வாடை - ( சிறுகதை )

ழனி பேருந்து நிலையத்தில் வழக்கம் போல நசநசப்புக்குக் குறைவில்லை. காவிகளும் காவடிகளுமாக எங்கு பார்த்தாலும் கூட்டம். ஊருக்குத் திரும்பும் அவசரம். எல்லாப் பேருந்துகளும் பக்தர்களை அள்ளி அடைத்தபடி மெதுவாக நகர்ந்து வெளியேறிக்கொண்டிருந்தன. இன்று காலையில் என் கல்லூரித் தோழனின் திருமணம் திருஆவினன்குடி கோவிலில் நடந்தது. முந்தைய நாள் இரவே வந்துவிட்டேன். தீபம் லாட்ஜில் ரூம் போட்டாயிற்று. என்னைத் தவிர இன்னும் மூன்று நண்பர்கள். ஒருவரை ஒருவர் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டபடியால் இரவு வெகுநேரம் வரை அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். காலையில் திருமணம் முடிந்தவுடன் நண்பர்கள் கிளம்பி விடவே நான் மட்டும் களைப்புத் தீர சிறிது நேரம் தூங்கிவிட்டுச் செல்லலாம் என்று படுத்தேன். விழித்துப் பார்த்த போது மணி சாயங்காலம் நாலு ஆகியிருந்தது. அவசர அவசரமாக விடுதி அறையைக் காலி செய்து விட்டுப் பேருந்து நிலையம் வந்து நின்றுகொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் ஈரோடு வண்டி வந்து நின்றது. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறியிருந்த மக்கள் பேருந்தைச் சுற்றி மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள். படிக்கட்டில் முட்டிமோதி நுழைந்தேறிய கூட்டத்துடன் சோ்ந்து நானும் ஒருவனாக ஏறிக்கொண்டேன். அதற்கு முன்பாகவே பல புத்திசாலிப் பயணிகள் ஜன்னல் வழியாக கைக்குட்டைகளாலும் வாட்டர் பாட்டில்களாலும் ஒயர் கூடைகளாலும் இருக்கைகளை முன்பதிவு செய்துவிட்டார்கள். ஆனாலும் கூட எனக்கு ஒரு இடம் கிடைத்தது அதிர்ஷ்டமே! ஜன்னல் ஓரத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் அவள் கணவன். கடைசியாக நான். பின்னால் ஏறியவர்கள் நசுங்கிக் கொண்டு மூச்சுத் திணறி நின்றார்கள். அதைப் பார்த்த எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
   
சிறிது நேரத்தில் வண்டி கிளம்பியது. நகர எல்லையை விட்டு ரயில்வே லைன் தாண்டியது. செவண்த் பட்டேலியன் கடந்து தாராபுரம் சாலையில் மெல்ல வேகமெடுத்தது. நடத்துனர் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். வண்டிக்குள் எங்கு திரும்பினாலும் சந்தனம் அப்பிய மொட்டைத் தலைகள். குழந்தை குட்டிகளோடு நீக்கமற நிறைந்திருந்தன. பெரிய மொட்டைகள் கொய்யாப்பழம் கடித்துக் கொண்டும் வெள்ளரிப் பிஞ்சுகள் மென்று கொண்டும், சிறிய மொட்டைகள் பலூன், ரப்பர் பந்து, மயிலிறகு போன்றவற்றை வைத்து விளையாடிக் கொண்டும், சிலர் களைத்துப் போய் அரைத்தூக்கித்திலும் சிலர் வாயில் எச்சில் வழிந்தபடி முழுத் தூக்கத்திலும், மொத்தத்தில் பேருந்து முழுவதும் மொட்டைகள் ராஜ்யம். ஆனால் எனக்கு அருகில் வாய்த்தவன் மொட்டையல்ல. முடியுடை மன்னன்.

உண்மையிலேயே மன்னன் ஓய்வெடுப்பது போன்ற பாவனையிலேயே அமர்ந்திருந்தான். நெஞ்சை நிமிர்த்தி தலையை மேல் நோக்கி வைத்து வாயைப்பிளந்து கொண்டு கண்களை மூடி ஏகாந்தமாய்ச் சாய்ந்திருந்தான். ஆனால் அவனிடமிருந்து ஒரு கெட்ட வாடை வீசியது. கண்டுபிடித்துவிட்டேன். குடிகாரன் பாம்பின் கால் பாம்பறியுமே. நானும் குடித்துக் கொண்டிருந்தவன்தான். சமீபகாலமாகத்தான் குடியை விட்டேன்.

எட்டாம் வகுப்பு முழுப் பரிட்சை லீவுக்கு அப்பிச்சியின் ஊருக்குப் போனபோது ஆரம்பித்த பழக்கம்.

    “பய எலச்சி எலும்பா திரியறானே, ஒரு மரத்துக் கள்ளுக் குடிச்சா ஒடம்பு கிண்ணுன்னு ஏறும்ல” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு துண்டுக்காட்டுத் தென்னந்தோப்புக்குக் அப்பிச்சி கூட்டிச் செல்வார். ‘கள் என்பது உடல் நலத்துக்கு உகந்தது’ என்ற கருத்தாக்கம் கொண்டவர். சின்ன வயதில் தோள் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்த, கிணற்றில் இறக்கி நீச்சல் கற்றுக் கொடுத்த, நுங்கு சீவிக் கொடுத்த, இளநீர் பொத்துக் கொடுத்த அப்பிச்சியை மிகவும் பிடித்துப் போனதால் அவர் சொல்வது எல்லாம் எனக்கு வேதவாக்கு.

சுரக்குடுவையில் வெள்ளை வெளேரென நுரைத்துக் கொண்டிருக்கும் கள்ளை முதன்முறையாக முகர்ந்த அந்த நிமிடமே அதன் மணம் என் மூளையில் சென்று பதிய வேண்டிய இடத்தில் பதிந்து கொண்டது. ஒரு மரத்துக் கள்ளும், அதற்கு நக்கிக்கொள்ள நாரத்தங்காய் ஊறுகாயுமாக அந்த முழுப் பரிட்சை லீவில் என் குடியைத் தொடங்கினேன்.

கள்ளில் ஆரம்பித்த குடி கல்லூரிக்குள் நுழைந்ததும்  பீருக்கு மாறியது.  பிறகு வேலைக்குச் சென்ற பின் பீரின் இடத்தை விஸ்கி பிடித்துக் கொண்டது. மிகவும் சந்தோஷமாய் இருந்தாலும் குடிப்பேன். தாங்க முடியாத மனச்சோர்வில் இருந்தாலும் குடிப்பேன்.

என்னுடைய குடியுரிமைக்கு கல்யாணம் ஆகும்வரை எந்த பங்கமும் ஏற்படவில்லை. ஆனால் வந்து வாய்த்தவளுக்கோ குடியென்றாலே வெறுப்பு. அதற்குக் காரணம், குடித்துக் குடித்தே குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திய அவளுடைய அப்பா. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சர்வகாலமும் அவள் அம்மாவை அடித்துத் துன்பப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். பிறகு ஒருநாள் குண்டாமணி வெடித்துச் செத்துப் போய்விட்டார். அம்மாவின் அரவணைப்பில் கஷ்டப்பட்டு படித்து வங்கியில் வேலை பெற்று தெரிந்த குடும்ப நண்பர் மூலமாக எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமாகி பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் சுற்றமும் நட்பும் சூழ என் கையால் தழையத் தழையத் தாலி கட்டிக் கொண்டு முதலிரவன்று அவள் கேட்ட முதல் கேள்வியே “நீங்க குடிப்பீங்களா?” என்று தான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சற்றுக் குழம்பிய பின், “இல்லை” என்று சொல்லிவிட்டு அப்போதைக்கு ஆகவேண்டிய காரியத்தில் கண்ணாய் இருந்து விட்டேன். அன்று ஆரம்பித்தது எனக்குச் சனி. பேசாமல் உண்மையைச் சொல்லியிருந்தாலாவது அப்போதே ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இல்லையென்று பொய் சொல்லிவிட்டதால் எனக்கும் சௌகரியமாகப் போய்விட்டது. அவளுக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பித்தேன். இரவில் குடிக்கும் சூழ்நிலை வந்தால் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்தேன். காலையில் வந்து சில பொருத்தமான பொய்களைக் கூறிக்கொண்டேன்.
   
கொழுத்த நண்டு எத்தனை நாள்தான் வலையில் தங்க முடியும். ஒருநாள் வெளியில் வந்தது. குடித்த ஓர் இரவு வீட்டுக்கு வரவேண்டியதாயிற்று. அன்றைக்குப் பார்த்து அவள் என்னை அணைய முற்பட வாடை காட்டிக் கொடுத்துவிட்டது. அன்றைக்குத்தான் அவளுடைய விஷ்வரூபதரிசனத்தைக் கண்டேன். பத்ரகாளி கோலம் கொண்டு நிலமதிரக் குதித்தாள். கையில் கிடைத்ததையெல்லாம் விட்டெறிந்தாள். கண்ணில் கண்டதையெல்லாம் போட்டுடைத்தாள். மண்ணெண்ணையைத் தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குச்சி கொளுத்தினாள்.

    “ஏய் பைத்தியமாடி உனக்கு? வயத்தில மூணுமாசக் குழந்தைய வச்சிட்டு இப்படிக் குதிக்கறே.”

    “பைத்தியமா? ஏண்டா சொல்லமாட்டே நாயே. குடிக்கறதுமில்லாம அத எங்கிட்ட இத்தன நாளா மறைச்சு பொய் சொல்லிட்டு இருந்திருக்கறே.”

    “இங்கபாரு இத ஒரு பிரச்சனையாக்காத...பிளீஸ்...”

    “இது உனக்குவேனா சாதாரணமா இருக்கலா. எனக்கு அப்பிடியில்லன்னு ஏற்கனவே உங்கிட்ட சொல்லியிருக்கறன்லடா?”

இனி ஒருபோதும் குடிப்பதில்லை என்று அவளிடம் நூறு சத்தியங்கள் செய்தேன். மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டேன். அன்று அவளைச் சமாதானப்படுத்தியதே இன்றுவரை என் வாழ்நாள் சாதனையாக இருக்கிறது.

வண்டி கிளம்பியபோது எந்தச் சலனமும் இல்லாதிருந்த பக்கத்து இருக்கைக்காரன் மெல்ல வேலையைக் காட்ட ஆரம்பித்தான். கொள்ளளவுக்கு மேல் குடிப்பவன் போலும். இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் திரும்பினான். எனக்கு சிர்..என்று கோபம் வந்தது. என்ன செய்வது. என் கோபத்தைப் பொருட்படுத்தும் நிலையில் குடிமகன் இல்லை. அந்தப் பெண்ணிடம் கோபத்தைக் காட்டலாமா என்று நினைத்தேன். அவள் அவனைக் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. எந்தச் சுரத்தும் இல்லாமல் எதையோ வாயில் போட்டுக் கொறித்துக் கொண்டே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். திருமணமாகி குறைந்தது பத்து வருடங்களாவது ஆகியிருக்கலாம். முதிர்வு முகத்திலும் உடலிலும் தெரிந்தது. சந்தோஷமற்ற வெறிப்பு அவள் கண்களில் இருந்தது. மெலிந்த உடலும் வறண்டு போன தோலும் வெளிறி வெடித்திருந்த உதடுகளும் செம்பட்டையேறிய சிகையும் அவள்மேல் ஒரு பரிதாபத்தை உண்டாக்கியது. அவள்மேல் கோபப்பட்டு என்ன பயன் என்று நினைத்துக் கொண்டேன்.

குடிமகன் சற்றுநேரம் இரை விழுங்கிய பாம்பு போல் நெளிந்துவிட்டு என் மடிமேல் சாய்ந்து விழுந்தான். அதற்குள் அவன் பக்கமாகத் திரும்பிய அந்தப் பெண் என் மடிமேல் சாய்ந்தவனைக் கையால் இரண்டு தட்டுத்தட்டி “ந்தா எந்திரீ” என்று சட்டையைப் பிடித்து இழுத்தாள். சட்டென்று சுதாரித்து எழுந்தவன் நல்ல பாம்பைப்போல தலையை வலதும் இடதுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். என்னைப் பார்த்து ஒரு இளிப்புக் காட்டினான். இளித்துக்கொண்டே அந்தப் பெண்ணின் மீது விழுந்தான். அவளுடைய தொடைகளின் மீது முகத்தை வைத்து அசிங்கமாகத் தேய்த்தான். அந்தச் செயலால் எரிச்சலடைந்த அவள் அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள். உடனே நிமிர்ந்த அவன் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே உதட்டைக் குவித்து அவளை முத்தமிடப் போனான். அவள் தன் கையால் அவனைத் தடுத்துத் தள்ளிவிட மீண்டும் ஒருவாறு பழைய இருப்புக்கு வந்தான்.   

சிறிது நேரம் கழித்து உடலைச் சற்று இறக்கி கால்கள் இரண்டையும் மடக்கி முன் இருக்கையில் வைத்து ஒரு உந்து உந்தினான். முன் இருக்கை முழுவதும் குலுங்கியது. அதிலிருந்த மொட்டை ஒன்று திரும்பி முறைத்தது. சற்று நேரம் அப்படியே இருந்துவிட்டு அந்த இருப்பில் திருப்தியில்லாதவனாக மீண்டும் நெளிந்து எழும்பி முன் இருக்கையில் கைகள் இரண்டையும் குறுக்கு வெட்டாக வைத்து தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டான். அந்தப் பெண் ஏதோ முனகிவிட்டு மீண்டும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

எனக்கு எழுந்து நின்றுவிடலாம் போல் தோன்றியது. ஆனால் நிற்பவர்களின் நிலை கண்டு என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அது மட்டுமல்லாமல் குடிமகனிடமும் அதற்குப் பிறகு எந்தச் சலனமும் இல்லாததால் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தேன்.

பேருந்து தாராபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குடிமகன் மெல்ல தலையைத் தூக்கி என்னைப் பார்த்தான். முகம் இறுக்கமாக இருந்தது. வயிற்றை இரண்டு முறை எக்கினான். “ஓய்” என்று பெருங்குரலெழுப்பினான். குடிகாரன் வாந்தியெடுத்தால் எப்படியிருக்கும் என்று வர்ணித்து எழுத  இன்னும் பயிற்சி வேண்டும் எனக்கு. கெட்டித் தயிருக்குள் முட்டையை விட்டு கலக்கியது போல மஞ்சளும் வெள்ளையுமாக, பாதி செரித்துப் பாதி செரிக்காமல் தரிசு தரிசாக கொளகொளவென்று வெளியே வந்து என் மேலேயே விழுந்தது. சுதாரிப்பதற்குள் மீண்டும் ஒருமுறை கக்கினான். சதசதவென்று என் உடல் முழுவதும் வாந்தியால் நனைந்து நாறிப்போனது. அதிலிருந்து வந்த கெட்ட வாடையால் எனக்கு மயக்கமே வருவதுபோல் ஆகிவிட்டது.

பேருந்து முழுவதும் அந்தக் கெட்ட வாடை பரவியது. எல்லா பயணிகளும் சங்கடத்தில் நெளிந்தனர். புடவைகளாலும் துண்டுகளாலும் மூக்கைப் பொத்திக் கொண்டனர். கூட்டம் வாந்தியெடுத்த பகுதியை விட்டு வட்டமாய் விலகி நின்றது. நடத்துனர் கண்டமேனிக்கு கெட்ட வார்த்தை பேசினார். வசவுகளால் அந்தப் பெண்ணைச் சீண்டினார். அவள் எழுந்து நின்று முந்தானையை உதறி இடுப்பில் செருகிக் கொண்டு குடிமகனை வெறித்துப் பார்த்தாளே தவிர வேறு எதுவும் செய்தாள் இல்லை. அவனுடைய வேட்டிக்கட்டு அவிழ்ந்து விலகியது. அப்படியே சரிந்து இருக்கைகளுக்கு நடுவில் விழுந்தான்.

அதற்குள் தாராபுரம் வந்துவிடவே குடிகாரனும் அந்தப் பெண்ணும் வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டனர். பேருந்தை சுத்தம் செய்து கொடுத்து விட்டுப் போகுமாறு அந்தப் பெண்ணிடம் நடத்துனர் தகராறு செய்து கொண்டிருந்தார். என்னுடைய அசூசையான பரிதாப நிலையைக் கண்டு ஒரு கடையில் தண்ணீர் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட முக்கால் குளியல் போட்டேன். தொப்பலாக நனைந்தபடியே அடுத்த வண்டி பிடித்து படியில் நின்றுகொண்டே ஈரோடு வந்து சேர்ந்தேன். உடல் சூடும் வெளிக்காற்றும் ஈரத்தைக் காயவைத்திருந்தன.

வீட்டுக் கதவைத் தட்டும்போது இரவு பத்தாகியிருந்தது. தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்த மனைவியிடம் எதுவும் பேசாமல் குளியலறைக்குப் போய் துணிகளைக் கழற்றிப் போட்டுவிட்டு ஒரு குளியல் போட்டேன். நேராக வந்து படுக்கையில் விழுந்தேன்.

சற்றுநேரம் கழித்து அருகில் வந்த மனைவி “பாத்ரூம்ல நீ கழட்டிப் போட்ட டிரஸ்ல  பிராந்தி நாத்தமடிக்குது.... குடிச்சிட்டு வந்தியா?” என்றாள்.

முதல் வணக்கம்

"ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சி பெற்று
      அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
மோதியிணைந் தியங்குகின்ற நிலைமைக் கேற்ப
     மூலகங்கள் பலவாகி அவை யிணைந்து
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
     பிறப்பு இறப்பிடை உணர்த லியக்கமாகி
நீதி நெறிஉணர் மாந்தராகி வாழும்
     நிலை உணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம் "

                                                                                       - வேதாத்திரி